Skip to main content

தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் அநாகரிக பேச்சு; பெண் தற்கொலை

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

Woman lost their life indecent speech of private financial institutions employees

 

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பகுதியில் இயங்கிவருகிறது பைவ் ஸ்டார் என்கிற தனியார் நிதி நிறுவனம். இந்த நிறுவனம் கிராமங்கள், நகர்ப்புறங்களில் ஏழை மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சுயஉதவிக்குழு பெண்களுக்கு குறைந்த வட்டி, இன்சூரன்ஸ் என பல ஆசைகளைக் காட்டி கடன் தருகின்றன. கடன் தரும்போது தேன் போல் பேசுபவர்கள் கடனை வசூலிக்கும்போது வார்த்தைகளில் விஷத்தை கக்குகின்றதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

 

ராணிப்பேட்டையை சேர்ந்த கீதா என்கிற பெண்மணி கடன் பெற்று சரியான முறையில் தவணை கட்டிவந்துள்ளார். கடந்த சில மாதங்களாக கட்ட முடியாத நிலை உருவாகியுள்ளது. தினமும் அவரது வீட்டுக்கு சென்ற நிதி நிறுவன ஊழியர்கள் அவரிடம் கடுமையாக பேசியும், மிரட்டியதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் அவர்கள் வீட்டுக்கு வந்தால் பயந்து நடுங்கியுள்ளார். இதனால் செப்டம்பர் 26ஆம் தேதி மதியம் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

 

நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக கூறி கீதாவின் உறவினர்கள் நிதி நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த ஊழியர்கள் அப்போதும் அடாவடியாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமான உறவினர்கள், பொதுமக்கள் சென்னை - சித்தூர் செல்லும் முக்கிய சாலையில் திடீரென அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

போராட்டத்தை கேள்விப்பட்டு அங்கு வந்த போலீஸார் புகார் தாருங்கள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கிறோம் என உத்தரவாதம் தந்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டனர். நிதி நிறுவன அலுவலர்களிடம் ஆவணங்களை எடுத்துக்கொண்டு காவல்நிலையத்துக்கு விசாரணைக்கு வரவேண்டுமென போலீஸார் அழைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.