திருப்பூரில் அரசு பெண் வழக்கறிஞர் ஒருவர் அலுவலகத்தில் புகுந்து அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மகிளா நீதிமன்ற அரசு வழக்கறிஞராக உள்ளவர் ஜமீலா பானு. இவரது மகள் நிஷா. திருப்பூர் குமரன் சாலையில் உள்ள அலுவலகத்தில் இன்று மகளுடன் ஜமீலா பானு இருந்துள்ளார். அப்பொழுது அலுவலகத்திற்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டினார். கூச்சல் சத்தம் வெளியில் கேட்க அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தடுப்பதற்குள் அந்த மர்ம நபர் ஓடி விட்டார்.
அதனைத் தொடர்ந்து பெண் வழக்கறிஞர் ஜமீலா பானு மற்றும் அவரது மகள் நிஷா ஆகியோர் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதலுக்கு பயன்படுத்திய அறிவாளை கைப்பற்றியுள்ள போலீசார் அதனை வைத்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூரின் முக்கிய சாலையில் பெண்கள் இருவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.