Skip to main content

டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்ட பெண்! 

Published on 05/10/2021 | Edited on 05/10/2021

 

The woman involved in the struggle  outside the office od DSP

 

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள மேலக்கல் பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கதுரை(42). இவரது மனைவி பாரதி(34). இவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

 

தங்கதுரை, வெளிநாட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது மனைவி பாரதியிடம், அவரது நகையை அடகு வைத்து வீடு கட்டுமாறு கூறியுள்ளார். கணவரின் பேச்சை நம்பி பாரதி தனது பெற்றோர் திருமணத்தின்போது போட்ட நகைகள் அனைத்தையும் அடமானம் வைத்து வீடு கட்டியுள்ளார். இந்த நிலையில், கடந்த ஆண்டு வெளிநாட்டில் இருந்து தங்கதுரை சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது நகையை மீட்டு தருமாறு கணவரிடம் கேட்டுள்ளார். அதற்கு கணவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அவ்வப்பொழுது தகராறு ஏற்பட்டுள்ளது. 

 

அதேபோல், கடந்த 26ஆம் தேதி கணவன் மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் நகை பிரச்சனையால் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தங்கத்துரை, தனது மனைவி பாரதியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரை போலீசார் வாங்க மறுத்ததாக கூறப்படுகிறதே. அதேபோல் பாரதியும், தனது செல்போன் மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முறையிட்டுள்ளார்.

 

இதையடுத்து மாவட்ட எஸ்.பி. சக்தி கணேசன், ராமநத்தம் போலீசாருக்கு பாரதி கணவர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடந்த செப்டம்பர் 27ம் தேதி பாரதி கணவர் தங்கதுரை மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், நேற்று காலை 10 மணி அளவில் திட்டக்குடி டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்த பாரதியும் அவரது தாய் வசந்தாவும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இதுகுறித்து பாரதி கூறும்போது, “ராமநத்தம் போலீசார் என் கணவருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். புகார் கொடுத்த என்னையே மிரட்டுகின்றனர். எனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனது கணவரை கைது செய்யவில்லை. எனவேதான் எனது கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்” எனக் கூறினார். 

 

பாரதியின் தர்ணா போராட்டம் குறித்து தகவலறிந்த திட்டக்குடி டி.எஸ்.பி. சிவா, பாரதியை ராமநத்தம் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து பாரதி, தர்ணா போராட்டத்தை கைவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.