
திண்டுக்கல் அருகே சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் கடந்த 15 ஆம் தேதி கை கால் வாய் துணியால் கட்டப்பட்டு ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தாடிக்கொம்பு போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சடலமாக மீட்கப்பட்டது பூத்தாம்பட்டியை சேர்ந்த ஜோதி மணி(35) என்பதை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் ஜோதி மணியின் அண்ணி கோமதி மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ஜோதி மணியை அவரது அண்ணனின் மனைவி கோமதி கொலை செய்தது என்று தெரியவந்தது. ஜோதிமணியின் அண்ணன் முருகன்(48). அவரது மனைவி கோமதி. இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில் முருகன் கோவையில் உள்ள ராணுவ முகாமில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். அதனால் பூத்தாம்பட்டியில் மனைவி கோமதி தனது 3 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் முருகனின் தம்பி ஜோதிமணி வீட்டில் தனியாக இருந்த கோமதியை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கோமதி இதுகுறித்து தனது பெற்றோர், தங்கை மற்றும் அவரது கணவரிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து கோமதி, அவரது பெற்றோர் நடராஜன், அவரது தங்கை மற்றும் அவரது கணவர் ஸ்டாலின் ஆகியோர் ஜோதிமணியை கொல்ல முடிவெடுத்து தீட்டம் தீட்டியுள்ளனர்.
அதன்படி சம்பவத்தன்று ஜோதிமணிக்கு கோமதி உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். பின்னர் ஜோதிமணி மயங்கியவுடன் கல், காலை துணியால் கட்டி, வாயில் துணியை வைத்து அடைத்து அவரை தூக்கிச் சென்று கிணற்றில் வீசிச்சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கோமதி உள்ளிட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.