Skip to main content

விடுதியில் பெண்ணிடம் பணபேரம் -விசாரணைக்கு ஆளான ஸ்ரீவில்லிபுத்தூர் காக்கிகள்!

Published on 15/05/2019 | Edited on 20/05/2019

“நடவடிக்கை எடுத்தால் தூக்கில் தொங்கி உயிரை விடுவேன்..”

விருதுநகர் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரியிடம் இப்படி பேசி நடவடிக்கையில் இருந்து தப்பியிருக்கிறார் ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமைக் காவலர் மாரிமுத்து.  

 

உயிரை விடும் அளவுக்கு அப்படி என்ன விவகாரம்?

 

 Woman at the hotel... sexual worker... Srivilliputhur catches for investigation onto police

 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் புறக்காவல்நிலைய பாதுகாப்பு அலுவலை மேற்கொண்டு வருபவர் தலைமைக் காவலர் மாரிமுத்து.  பணி நேரத்தில் சீருடை அணிய மாட்டார். உயர் அதிகாரி அறிவுறுத்தினாலும் கேட்க மாட்டார். ஏதோ ஒரு செல்வாக்கில் காவல்துறையில் ‘கெத்து’ காட்டிவந்த அவர், பெண் விவகாரத்தில் சிக்கியதால் விசாரணைக்கு ஆளாகியிருக்கிறார்.  அது என்னவென்றால், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலை ஒட்டிய சன்னதி தெருவில் பட்டர் ஒருவருக்குச் சொந்தமான விடுதி ஒன்று இருக்கிறது. அந்த விடுதியில் பாலியல் தொழில் நடந்துவருவது, ஆண்டாள் கோவிலில்  ‘ட்யூட்டி’ பார்க்கும் ஏட்டு மாரிமுத்துவுக்கு தெரியவந்தது. இதை வைத்துப் பணம் பண்ணலாம் என்று திட்டம் போட்ட அவர், இன்ஸ்பெக்டர் ஒருவரையும் அழைத்துக்கொண்டு சோதனை என்ற பெயரில் அந்த விடுதிக்குச் சென்றார். அங்கு பாலியல் தொழில் ஈடுபட்ட இளம் பெண் சிக்கிவிட, அவளை இன்னொரு பெரிய லாட்ஜுக்கு இழுத்துச் சென்றார்கள் ஏட்டு மாரிமுத்துவும் அந்த இன்ஸ்பெக்டரும். அங்கு வைத்து, ரூ.1 லட்சம் தந்தால் விட்டுவிடுவேன் என்று பேரம் நடத்தி, ரூ.50000-க்கு இறங்கி வந்திருக்கிறார்கள் இரு காக்கிகளும். இதையறிந்த பாலியல் தரகர் ஒருவர், விருதுநகர் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு சென்றார். பாலியல் தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டுவது குறித்து இரு காக்கிகளிடமும் விசாரிக்கும்படி அந்த உயர் அதிகாரி உத்தரவிட, ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறை அதிகாரி விசாரணை நடத்தினார். அப்போது, அந்தப் பெண், ரூ.50000 கேட்டு மிரட்டினார் என்று ஏட்டு மாரிமுத்துவைக் கை காட்டியிருக்கிறாள்.   

 

 

விஷயத்தை அறிந்து ‘அட கேவலமே’ என்று நொந்துகொண்ட விருதுநகர் மாவட்ட காவல்துறை அதிகாரி, மாரிமுத்துவை ‘சஸ்பெண்ட்’ செய்வதென்று முடிவெடுத்தார். ஆனாலும், மாரிமுத்துவின் மீது கரிசனம் கொண்டு, சிவகாசி ஆயுதப்படை பிரிவுக்கு இடமாற்றம் செய்தார். மாரிமுத்துவோ   “என் மீது புகார் அளித்தவர் வீட்டில் உள்ள ஃபேனில் கயிறு மாட்டி தூக்கில் தொங்கி உயிரை விடப்போகிறேன்.” என்று திரும்பத் திரும்ப கெஞ்சியிருக்கிறார்.  உயர் அதிகாரியும் மனமிரங்கி, ஏற்கனவே பார்த்த கோவில் பாதுகாப்பு பணியைத் தொடர்வதற்கு உத்தரவிட்டிருக்கிறார். பாலியல் தொழிலாளியிடம் பேரம் நடத்தியபோது உடன் இருந்த காவல்துறை ஆய்வாளர், நடவடிக்கை என்ற பெயரில்,  இடைத்தேர்தல் நடக்கும் ஒட்டப்பிடாரத்துக்கு,  10 நாட்கள் பணிக்கு  அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். 

 

 

ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. ராஜாவை தொடர்புகொண்டோம். “எனக்கு எதுவும் தெரியாது.” என்று லைனை துண்டித்தார். இந்த விவகாரம் குறித்து நாம் விசாரித்து வருவதை அறிந்த ஏட்டு மாரிமுத்துவின் நண்பர் ஒருவர் “மாரிமுத்து ரொம்ப நல்லவர்.” என்றார் நம்மிடம்.  ‘என்ன நடந்ததென்று  அந்த நல்லவர் விளக்கம் தரட்டும். மாரிமுத்துவை பேசச் சொல்லுங்கள்.’ என்றோம்.  மாரிமுத்துவிடம் பேசிவிட்டு நம்மிடம் “மாரிமுத்து விளக்கம் அளிக்க விரும்பவில்லை. செய்தி போட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.” என்றார்.  

 

 

அந்த பாலியல் தொழிலாளி கட்டிட வேலை பார்த்துவரும் வறுமைச் சூழலில் உள்ளவராம். அவரிடம் போய், ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டியிருக்கிறார்கள் காக்கிகள். 

 

                                                                         -அதிதேஜா

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.