Skip to main content

அதிக வட்டி ஆசை காட்டி 2 கோடி ரூபாய் சுருட்டல்; நிதி நிறுவன பெண் இயக்குநர் கைது!

Published on 12/05/2023 | Edited on 12/05/2023

 

Woman director of financial company arrested for fraud of 2 crore rupees by claiming to give high interest!

 

சேலம் அருகே முதலீட்டுத் தொகைக்கு அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி 2 கோடி ரூபாய் சுருட்டிய நிதி நிறுவன பெண் இயக்குநரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.     

 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எம்.செட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. இவருடைய மனைவி மாலதி (30). இவர், சேலம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியுள்ளதாவது: “காடையாம்பட்டி அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியில் கே.எம்.கே.எஸ் குளோபல் டிரேடர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஒரு  தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்தது.

 

இந்த நிறுவனத்தின் இயக்குநர்களான நாகராஜ், அவருடைய மனைவி சத்யா, அக்கா கோகிலா, இவருடைய தாயார் மணி ஆகியோர் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு அதிக வட்டி தரப்படும் எனக் கூறினர். அதாவது, ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 6 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தனர். மேலும், 11 மாதத்தில் முதலீட்டுத் தொகையை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறினர். அதை நம்பி, இந்த நிறுவனத்தில் நான் 62.18 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தேன். ஆனால், அவர்கள் சொன்னபடி ஊக்கத்தொகையோ அசல் தொகையோ வழங்காமல் மோசடி செய்து விட்டனர்.”  இவ்வாறு புகாரில் தெரிவித்து இருந்தார்.

 

இந்த புகார் மீது காவல் ஆய்வாளர் முத்தமிழ் செல்வராஜன் விசாரணை நடத்தினார். புகாரில் முகாந்திரம் இருந்ததை அடுத்து, நிதி நிறுவனத்தின் இயக்குநர்கள் நாகராஜ், சத்யா, கோகிலா, மணி ஆகிய நான்கு பேர் மீதும் மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். இவர்களால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு முதலீட்டாளர்களும் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இதுவரை பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் இந்த நிறுவனம் 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. 

 

பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறைக்கு செல்வதை அறிந்த நிதி நிறுவன இயக்குநர்கள் திடீரென்று தலைமறைவாகிவிட்டனர். மோசடி கும்பலை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், கோகிலாவை தற்போது கைது செய்துள்ளனர். அவரை கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்ற மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.

 

இதற்கிடையே, பொருளாதார குற்றப்பிரிவினர் பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதில், ''கே.எம்.கே.எஸ் குளோபல் டிரேடர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பண முதலீடு செய்து ஏமாந்தவர்கள் யாராவது இருந்தால், அவர்கள் சேலம் பொருளாதார  குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம். மோசடி நபர்கள் இருக்கும் இடம் குறித்தும், அவர்கள் வாங்கிப் போட்டுள்ள சொத்துகள் குறித்த விவரங்கள் தெரிந்தாலும் அதைப்பற்றியும் காவல்துறைக்கு தகவல் அளிக்கலாம்.'' என அறிவிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.