ADVERTISEMENT

இன்ஸ்டாகிராம் வலையில் சிக்கிய இளைஞர்கள்! பொய் வாழ்க்கை நடத்தி பலரை ஏமாற்றிய பொன் தேவி!

12:38 PM Apr 17, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (வயது 34) பைனான்ஸ் தொழில் செய்கிறார். இவருக்கு வரன் தேடுவதை அறிந்த கோவில்பட்டியைச் சேர்ந்த புரோக்கர்கள் பாலமுருகனும் அமிர்தவல்லியும், சிவகாசியைச் சேர்ந்த பொன் தேவியை கரூரை அடுத்துள்ள ராயனூர் பகுதியிலுள்ள விக்னேஸ்வரனின் உறவினர்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று பேசி, திருமணம் முடித்து வைத்தனர். திருமணம் நடந்த மூன்றாவது நாள், சிவகாசியில் இருக்கும் சித்தி வீட்டுக்கு விருந்துக்குச் செல்ல வேண்டும் எனக்கூறி, விக்னேஸ்வரனை அழைத்துச் சென்றார் பொன்தேவி. அங்கு சித்தியின் மகளுக்கு புதுத் துணி எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டு ரூ. 8,500ஐ பெற்றுக்கொண்டு எஸ்கேப் ஆனார். நீண்ட நேரமாகியும் மனைவி திரும்பி வராததால், பொன் தேவியைக் காணவில்லை என்று விக்னேஸ்வரன் சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போதுதான், பொன் தேவி பல நபர்களைத் திருமணம் செய்து ஏமாற்றிய விபரம் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஓரிரு நாட்களுக்கு முன், பொன் தேவி மற்றொரு நபரைத் திருமணம் செய்து ஏமாற்றியது தெரிய வந்து சிவகாசி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். கரூர் விக்னேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் பொன் தேவி சிவகாசியிலிருந்து கரூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை போலீசார், பொன் தேவி மற்றும் புரோக்கர்கள் பாலமுருகன், அமிர்தவல்லி ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விக்னேஸ்வரன் திருமணத்தின்போது, பொன்தேவிக்கு தாலிச் செயின், மோதிரம், தோடு, மூக்குத்தி என 8 ¾ பவுன் நகைகள் போட்டுள்ளனர்.

மேலும், பொன் தேவியின் சொந்த ஊர் தேனி மாவட்டம் - கம்பம் என்றும், அவருடைய முதல் கணவர் பெயர் கார்த்திக் என்பதும் அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. கரூர், திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர், சேலம், அவினாசிபாளையத்தைச் சேர்ந்த இளைஞர்களையும் ஏமாற்றி திருமணம் செய்ததோடு, அவர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளைப் பறித்துள்ளதும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் இளைஞர்களைக் கவர்ந்து ஏமாற்றி அவர்களுடன் பொய்யான வாழ்க்கை நடத்தியதும் தெரிய வந்திருக்கிறது. கணக்கில்லாமல் கல்யாணம் பண்ணும் மோசடி பெண்களும் ஏமாறும் ஆண்களும் அவ்வப்போது செய்திகளில் அடிபடுவது வாடிக்கையாகிவிட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT