Woman arrested for cheating on ATMs

சமீப காலமாக ஏடிஎம் மையங்களில் எழுதப் படிக்க தெரியாதவர்கள் பணம் எடுக்க வரும்போது அங்கே ஒரு பெண்மணி நின்றுகொண்டு, அவர்களுக்கு உதவி செய்து பணம் எடுத்துக் கொடுப்பது போல் அவர்களது உண்மையான ஏடிஎம் கார்டை எடுத்துக்கொண்டு, போலி ஏடிஎம் கார்டை கொடுத்து வந்தார். மேலும் அவர்களது ரகசிய குறியீடு எண்ணை தெரிந்துகொண்டு தொடர்ந்து பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டார். விழுப்புரத்தை அடுத்த ஆசாரம் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஏழுமலை. இவர் கடந்த மாதம் 9ஆம் தேதி விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக வந்தார்.

Advertisment

அப்போது அங்கு நின்றிருந்த பெண் ஒருவர், தான் பணம் எடுத்து தருவதாக கூறி ஏழுமலையின் ஏடிஎம் கார்டையும் ரகசிய எண்ணையும் வாங்கி பயன்படுத்தி, அவருக்குத் தேவையான பணத்தை எடுத்துக் கொடுத்து அனுப்பியுள்ளார். சில நாட்கள் கழித்து ஏழுமலை அதே ஏடிஎம் கார்டை எடுத்துச் சென்று ஏடிஎம்மில் பணம் எடுக்க முயன்றபோது பணம் எடுக்க முடியவில்லை. உடனே அந்த கார்டை எடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று விவரம் கேட்டுள்ளார். அப்போது வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அது போலி ஏடிஎம் கார்டு என்றும் அவரது உண்மையான கார்டு என்ன ஆனது என்றும் விவரம் கேட்டுள்ளனர்.

மேலும், உண்மையான ஏடிஎம் கார்டை பயன்படுத்தி யாரோ ஒருவர் அவரது கணக்கிலிருந்து ஏற்கனவே 5 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துள்ளதாக விவரம் தெரிவித்தனர். அப்போதுதான் ஏற்கனவே ஒரு பெண்ணிடம் ஏடிஎம் கார்டு கொடுத்து பணம் எடுக்க சொன்னபோது அந்தப் பெண்மணி உண்மையான ஏடிஎம் கார்டை எடுத்துக்கொண்டுபோலியான கார்டை கொடுத்தது அவருக்குத் தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் மாவட்ட எஸ்பி ராதாகிருஷ்ணன், தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட மோசடி பெண்ணை தீவிரமாக தேடி கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.

Advertisment

அதன்படி தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட ஏடிஎம்மில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதனடிப்படையில் திருச்சி அருகிலுள்ள கூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 40 வயது சீதாலட்சுமி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், விவசாயி ஏழுமலையின் ஏடிஎம் கார்டை மோசடி செய்து பறித்துச்சென்று, அவரது வங்கிக் கணக்கில் இருந்து 5 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதேபோன்று விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஏடிஎம் மையத்தில் லட்சுமி என்பவர் பணம் எடுக்க வந்தபோது இந்தப் பெண் அவரிடம் மோசடியில் ஈடுபட முயன்றுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து கைதுசெய்யப்பட்ட அந்தப் பெண்மணியிடம் இருந்து 5 லட்சம் மதிப்பிலான 108 கிராம் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர். சீதாலட்சுமி திருச்சி, சமயபுரம், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 14 குற்ற வழக்குகளில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து இன்னும் யார் யாரிடம் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.