Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; கணவனைக் கொல்ல முயன்ற மனைவி! 

Published on 31/01/2023 | Edited on 31/01/2023

 

Woman and her boy friend police arrested

 

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன், அனிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தம்பதியினர். இந்த தம்பதியருக்கு இரண்டு மகன், ஒரு மகள் என 3 குழந்தைகள் உள்ளனர். லாரி டிரைவரான வெங்கடேசன் மாதத்திற்கு 2 அல்லது 3 முறை வீட்டிற்கு வந்து பிள்ளைகள் மற்றும் மனைவியை பார்த்துவிட்டு செல்வது வழக்கம். இவருடைய மனைவி அனிதா குள்ளஞ்சாவடி அருகேயுள்ள தனது சொந்த ஊரான தோப்புக்கொல்லை கிராமத்திற்கு கூலி வேலைக்கு தினமும் பேருந்தில் சென்று வருவார். 

 

அதேசமயம் வெங்கடேசனின் நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான சண்முகம் (45) என்பவர் வெங்கடேசன் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். இதனால் சண்முகத்திற்கும், வெங்கடேசனின் மனைவியான அனிதாவிற்கும் திருமணம் கடந்த உறவு ஏற்பட்டுள்ளது. மேலும் அனிதாவை தினமும் தனது ஆட்டோவில் அழைத்து சென்று வந்துள்ளார். அவ்வப்போது இருவரும் பலமுறை தனிமையில் இருந்துள்ளனர். ஒருமுறை இவர்கள் இருவரும் வீட்டில் தனிமையாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் பின்னர் மனைவி மற்றும் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தோப்புக்கொல்லை கிராமத்திற்கு சென்று 6 மாத காலமாக அந்த கிராமத்தில் வசித்து வந்தனர். 

 

இருப்பினும் சண்முகமும் அனிதாவும் போனில் தொடர்பு கொண்டு அடிக்கடி பேசி வந்துள்ளனர். இந்த விஷயம் கணவர் வெங்கடேசனுக்கு தெரிய வரவே இவர்களின் சந்திப்பிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்கடேசனை கொலை செய்ய திட்டமிட்ட சண்முகம், மதுவில் விஷ மருந்தை கலந்து அனிதாவிடம் கொடுத்துள்ளார். அதனை அனிதா கணவரிடம் கொடுத்துள்ளார். அதில் விஷம் கலந்து இருப்பது தெரியாமல் வெங்கடேசன் மனைவி கொடுத்த மதுவை வாங்கி வீட்டில் வைத்து குடித்துள்ளார். குடித்த சிறிது நேரத்தில் வெங்கடேசன் மயக்கமடையவே அவரை அருகில் உள்ள குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இதுகுறித்து உறவினர்களுக்கு சந்தேகம் எழவே குள்ளஞ்சாவடி காவல்நிலையத்தில் உறவினரான கந்தன் புகார் கொடுத்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினர் அனிதா மற்றும் சண்முகம் இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரும் மதுவில் விஷம் கலந்து வெங்கடேசனை கொலை செய்ய திட்டம் தீட்டியதை ஒப்புக்கொண்டனர். அதையடுத்து குள்ளஞ்சாவடி போலீசார் அனிதா மற்றும் சண்முகம் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

 

இதேபோல் பண்ருட்டி அடுத்த தட்டாஞ்சாவடி காந்திநகரை சேர்ந்த சக்திவேல் (வயது 28) என்பவருக்கும் அங்குசெட்டிபாளையத்தை சேர்ந்த, கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணுக்கும் ஏற்பட்ட உறவால் அந்த பெண்ணை ஏற்கனவே காதலித்து வந்த பண்ருட்டி களத்துமேட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவரான சுமன் என்பவர் ஆத்திரமடைந்தார். 

 

கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி அதிகாலை காளியம்மன் கோவில் பின்புறத்தில் சக்திவேல் வெட்டி படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதற்கிடையில் சம்பந்தப்பட்ட பெண்ணும் தற்கொலை செய்து கொண்டார். சக்திவேல் கொலை வழக்கு தொடர்பாக புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து சுமன் மற்றும் அவரது நண்பர்கள் வசந்தகுமார், குணா ஆகிய மூவரையும் கைது செய்த நிலையில் அந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சில குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடி வந்தனர். 

 

Woman and her boy friend police arrested

 

இந்த நிலையில் கொக்குபாளையம் கெடிலம் ஆற்றில் சந்தேகப்படும்படி சிலர் பதுங்கி இருப்பதாக நேற்று கிடைத்த தகவலின் பெயரில் அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் பண்ருட்டியை சேர்ந்த மாரியப்பன் மகன்கள் மணிகண்டன்(23), மகேஷ்(21) கொக்குபாளையத்தை சேர்ந்த அசோக் மகன் ஆட்டோ டிரைவர் அஜித்(23) என்பதும் சக்திவேல் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.