Skip to main content

தீபத் திருவிழா நடக்குமா?-சூசகமாக அறிவித்த மாவட்ட ஆட்சித்தலைவர்!

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

 Will there be a festival of lights? announced District Collector!

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத்திருவிழா என்பது தென்னிந்தியாவில் புகழ்பெற்றது. தீபத்தன்று மட்டும் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, பாண்டிச்சேரி, மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் இருந்து வருவார்கள். திருவிழா நடைபெறும் 13 நாட்களும் காலை இரவு என இரண்டு முறை சுவாமி வீதியுலா நடைபெறும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை நகரில் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

 

கடந்தாண்டு கரோனா பரவலைத் தடுக்க திருவிழா கோவிலுக்குள் மட்டும் நடத்தி முடிக்கப்பட்டது. இந்தாண்டு திருவிழாவை நடத்த வேண்டும் என பலதரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடமும் திருவிழாவோடு சம்மந்தப்பட்ட பிரமுகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் ஆலோசனைக் கூட்டத்தில் பேசும்போது, ''கடந்தாண்டு 5 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் வழியாக டிக்கெட் வழங்கப்பட்டு கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு கோவில் பிரகாரத்தில் விழா நடத்தப்பட்டது. இந்தாண்டு 5 ஆயிரம் என்பதை 10 ஆயிரமாக உயர்த்தி பக்தர்களை அனுமதிக்கலாம்.

 

காரணம், இப்போதுதான் கரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது. அருகில் உள்ள மாநிலங்களில் கரோனா தாக்கம் குறையவில்லை. அதேபோல் உலகின் சில நாடுகளில் மீண்டும் கரோனா பரவுகிறது, நாமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. அதனால் கடந்தாண்டைப் போல இந்தாண்டும் திருவிழாவைக் கோவில் பிரகாரத்தில் வைத்து ஆகம விதிப்படி நடத்தலாம்'' என தன் கருத்தைப் பதிவு செய்தார்.

 

 Will there be a festival of lights? announced District Collector!

 

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ''ஆன்மீக மக்களின் பாதுகாவலனாக முதலமைச்சர் ஸ்டாலின் அரசு உள்ளது. திருவிழா நடத்துவது தொடர்பாக முதல்வரிடம் ஆலோசனை நடத்துவோம். ஆட்சிக்கு வந்த 5 மாதத்தில் கரோனா பரவலை திமுக அரசு கடுமையாகப் போராடி தினசரி பாதிப்பு 32 ஆயிரம் என்பதை ஆயிரத்துக்குள் கொண்டு வந்துள்ளதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். இவையெல்லாம் கவனத்தில் கொண்டு முதலமைச்சரின் உத்தரவுப்படி முடிவெடுக்கப்படும்'' என்றார்.

 

வரும் நவம்பர் 10 ஆம் தேதி தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெறவுள்ளது. நவம்பர் 19 ஆம் தேதி காலை பரணி தீபமும், மாலை மகாதீபமும் ஏற்றப்படவுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோன்கள் கண்காணிப்பில் வெள்ளியங்கிரி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Drones are the key to surveillance

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் காட்டுத்தீ ஏற்படும் சூழ்நிலைகளும் உருவாகியுள்ளது. பக்தர்கள் மலையேறுவதற்கான பாதையைத் தவிர்த்து வேறு பாதையைப் பயன்படுத்திவிடாமல் இருக்க கண்காணிக்கப்படுவதாற்காக ட்ரோன்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாரை சாரையாக மலையேற தொடங்கி வரும் நிலையில் சுழற்சி முறையில் தற்போது ட்ரோன்கள் மூலம் பக்தர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Next Story

கள்ளழகர் திருவிழாவில் நிகழ்ந்த சோகம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy at the Kalalhagar festival Police serious investigation

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர்.  தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம் வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இதனையடுத்து மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அழகருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். 

Tragedy at the Kalalhagar festival Police serious investigation

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். சித்திரைத் திருவிழா நடந்த மதுரை மாவட்டம் ஆழ்வார்புரம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சோனையை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இதனையடுத்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து மதுரை மாநகர போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.