Skip to main content

'வீட்டு மின் நுகர்வோர்களை இது பாதிக்காது' - தமிழக மின் பகிர்மான கழகம் அறிவிப்பு

Published on 24/06/2023 | Edited on 24/06/2023

 

nn

 

மத்திய அரசு வெளியிட்டுள்ள மின்சார விதிகள் திருத்தம் தமிழ்நாட்டில் நுகர்வோர்களை பாதிக்காது எனத் தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

 

மாலை நேர உச்ச காலங்களில் 20% மின் கட்டணம் கூடுதலாக உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற விதி வீட்டு இணைப்புகளுக்கு பொருந்தாது என மின் வாரியம் அறிவித்துள்ளது. மின்சார நுகர்வோர் உரிமைகள் விதிகள் 2020ல் சில திருத்தங்கள் செய்ததன் மூலம் நடைமுறையில் உள்ள மின் கட்டணம் அமைப்பில் இரண்டு மாற்றங்கள் செய்து நேற்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் இந்த திட்டங்கள் மூலம் தமிழக நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் எனத் தமிழ்நாடு மின்சார பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் எல்லா நேரங்களிலும் ஒரே விகிதத்தில் மின்சாரத்தின் கட்டணத்தை வசூலிப்பதை விட மின்சார கட்டணம் நாளின் நேரத்திற்கு ஏற்ப மாறுபடுவதே டி.ஓ.டி (Time Of Day) கட்டணமாகும்.

 

இந்த கட்டண முறையின் கீழே சூரிய சக்தி மின்சாரத்தை பயன்படுத்தும் நேரங்களில் வசூலிக்கும் கட்டணம் நாள் முழுவதும் வசூலிக்கப்படும் சாதாரண கட்டணத்தை விட 10 சதவீதம் முதல் 20 சதவீதம் குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. டி.ஓ.டி நேரம் என்பது ஒரே நாளில் எட்டு மணி நேரம் என்ற அளவில் மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் குறிப்பிடும் நேரத்தில் அமையும். உச்ச நேரங்களில் கட்டணம் 10 முதல் 20 சதவீதம் அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்த மாற்றம் 2024 ஏப்ரல் ஒன்று முதல் அதிகபட்ச தேவை கொண்ட தொழில்துறை நுகர்வோர்களுக்கும், 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் விவசாய நுகர்வோர்கள் மற்றும் அனைத்து நுகர்வோர்களுக்கு டி.ஓ.டி கட்டணம் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட உடன் இவை அமலுக்கு வரும்.

 

தமிழகத்தில் 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. சென்னையில் டி.நகர் பகுதியில் இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்னும் பல இடங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் பணிகள் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புதிய விதிகள் மூலம் தமிழ்நாட்டு நுகர்வோர்கள் பாதிப்படைய மாட்டார்கள் எனத் தமிழக மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. உச்ச நேர கால அளவு கட்டணம் வீட்டு நுகர்வோர்களுக்கு நிர்ணயிக்கப்படவில்லை. எனவே இதனால் தமிழகத்தில் வீட்டு நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். அதேபோல் தமிழகத்தில் வீடுதோறும் வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரம் திட்டம் எந்த அளவிற்கும் பாதிப்படையாது எனத் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு கேட்டது... மத்திய அரசு கொடுத்தது - நிவாரண நிதி ஒதுக்கீடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Central government relief fund allocation to tamilnadu

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இதற்கிடையில், வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகம் சந்தித்து வரும் இயற்கை பேரிடர்கள் பற்றியும் அதன் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் பெயரில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமணன் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.