Skip to main content

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஜெ. பல்கலைக்கழகம் முடக்கமா?

Published on 30/06/2021 | Edited on 30/06/2021

 

Will J University, which was brought under AIADMK rule, be shut down?

 

நேற்று (29.06.2021) ஜெ. பல்கலைக்கழகத்திற்கு வருகைதந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவருடன் அதிமுக ஒன்றியச் செயலாளர் சுரேஷ்பாபு, ராமதாஸ், மாவட்ட மாணவரணி சக்திவேல், ஜெ. பேரவை ராமதாஸ், நகர துணைச் செயலாளர் செந்தில் உட்பட பலரும் இருந்தனர். அங்கு வருகைதந்த சி.வி. சண்முகம் பத்திரிகை ஊடகத்தினரிடம், “கடந்த அதிமுக ஆட்சியில் வேலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவந்தது திருவள்ளுவர் பல்கலைக்கழகம். அதைப் பிரித்து விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஜெ. பல்கலைக்கழகம் என்று புதிதாக துவக்கப்பட்டது.

 

அதற்கு துணைவேந்தரும் நியமிக்கப்பட்டு அலுவலகம் அமைத்து செயல்பட்டுவருகிறது. இந்த நிலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி படிக்க இனிமேல் மீண்டும் பழைய முறைப்படி திருவள்ளுவர் பல்கலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அப்பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அதன் வரையறை எல்லைக்கு அப்பால் உள்ள மாவட்டங்களில் விளம்பரம் செய்துள்ள நோக்கம் என்ன? வேலூரை தலைமையிடமாகக் கொண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகம் செயல்பட்டுவந்தபோது விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி படிக்க அங்கு விண்ணப்பித்தனர்.

 

மேலும், கல்லூரி சம்பந்தமாக பல்கலைக்கழகத்திற்கு வேலூர் சென்றுவர மிகுந்த சிரமம் அடைந்தனர். அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஜெ பல்கலைக்கழகம் என புதிதாக முறைப்படி துவக்கப்பட்டு செயல்பட்டுவந்தது. தற்போது ஏதோ உள்நோக்கத்துடன் மீண்டும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை மேற்படிப்புக்காக மாணவர்கள் அணுக வேண்டும் என்று விளம்பரம் வெளியிட்டதன் நோக்கம் என்ன? மாணவர்களின் எதிர்காலம் கருதி அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்கலைக்கழகத்தை மேம்படுத்த வேண்டுமே தவிர, அதை முடக்க நினைப்பது தவறு. உயர்கல்வித் துறை செயலர் இச்செயலில் ஈடுபட்டுவருகிறார்.

 

இதனால் முதல்வர் மற்றும் துறை அமைச்சரிடம் நல்ல பெயர் எடுத்து, மேலும் நல்ல பதவிகளைப் பெறும் நோக்கத்திலும், ஜெ பெயரில் இந்தப் பல்கலைக்கழகம் உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக இந்தப் பல்கலைக்கழகத்தை முடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயலர் செயல்படுகிறார். கடந்த ஆட்சியில் இருந்த திட்டங்கள் தொடரும் என முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்துள்ளார். எனவே உயர்கல்வி படிப்பதற்கான மாணவர்கள் சேர்க்கையை ஜெ. பல்கலைக்கழகம் நடத்த அனுமதி வழங்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்” என்று முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
PMK Ramdas campaign supporting the candidate

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இத்தகைய சூழலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.

இதற்கிடையே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பட்டாளி மக்கள் கட்சிக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி அரக்கோணம் - பாலு, கடலூர் - தங்கர்பச்சான், திண்டுக்கல் - திலகபாமா, தர்மபுரி - செளமியா அன்புமணி, விழுப்புரம் - முரளி சங்கர், ஆரணி - கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், சேலம் - அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - தேவதாஸ்  காஞ்சிபுரம் - ஜோதி வெங்கடேஷ் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து கோவடி கிராமத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு நல்ல வேட்பாளரான முரளி சங்கர் நிறைய படித்துள்ளார். 6 மொழிகளில் சரளமாக பேசுவார். மக்களை பற்றி சிந்திக்க கூடியவர். மக்களுக்காக பாடுபடக்கூடியவர். சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார்” எனத் தெரிவித்தார். 

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.