Wildebeest herd encroaching on roadsides- forest department warns

Advertisment

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, மான், புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அவ்வப்போது வனவிலங்குகள் குடிநீர், உணவைத்தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் வருவதும் ஊருக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாகச் சுற்றி வந்தன. காட்டெருமைகள் கூட்டத்தைக் கண்ட சில வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு கீழே இறங்கி ஆபத்தை உணராமல் தங்களது செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். இதைத் தொடர்ந்து ரோந்து வந்த வனத்துறையினர், வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, 'காட்டெருமைகள் மாலை வேளையில் தண்ணீர் அருந்துவதற்காக குட்டைகளுக்கு வருவது வழக்கமான ஒன்றுதான். வாகன ஓட்டிகள் காட்டெருமைகளைக் கண்டால் அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தவோ, அதிக ஒலிஎழுப்பி ஹாரன்களை அடிக்கவோ கூடாது. அவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.’ என்றனர்.