
தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் கேட்டை உடைத்துக் கொண்டு யானை ஒன்று உள்ளே புகுந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே வைதேகி நீர்வீழ்ச்சி செல்லக்கூடிய பகுதியில் வசித்து வருபவர் பாலு. விவசாய பொருட்களை வீட்டின் வாசலில் காய வைத்து விட்டு இரவில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்பொழுது உணவு தேடி வந்த ஒற்றை காட்டு யானையானது வீட்டின் கேட்டை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தது. மேலும் வெளியில் வைக்கப்பட்டிருந்த நிலக்கடலை, ரேஷன் அரிசி, மாட்டு தீவனங்களை எடுத்து சாப்பிட்டுவிட்டு சுமார் 2 மணி நேரம் அந்த பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தது. இதனால் பாலு மற்றும் அவரது குடும்பத்தினர் அச்சத்தில் உறைந்தனர்.
பாலு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். ஆனால் வனத்துறையினர் வந்த ஜீப் பாதி வழியில் கோளாறு ஏற்பட்டதால் நின்றது. பின்னர் ஒருவழியாக வந்த வனத்துறையினர் வந்து சேர்ந்த நிலையில் பொதுமக்கள் உதவியுடன் யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.