Skip to main content

யானையிடம் பலியான வன ஊழியர்...!

Published on 24/12/2019 | Edited on 24/12/2019

காட்டுக்குள் கேமரா பொருத்துவதற்கு சென்ற வனக்காப்பாளரை யானை தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Wild elephant-Forest guard

 



ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள கீழ்முடுதுறை என்ற கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன்(46). இவர் பவானிசாகர் வனச்சரகத்தில் வனக்காப்பாளராக பணிபுரிந்து வந்தார். இன்று மதியம் வனக்காப்பாளர் மகேந்திரன், வேட்டைத்தடுப்பு காவலர்கள் மூன்று பேர் என 4 பேர் வனப்பகுதியில் தானியங்கி கேமரா பொருத்தும் பணிக்காக கொத்தமங்கலம் வனப்பகுதிக்கு சென்றனர்.

அடர்ந்த காட்டுப் பகுதியான அங்கு அருளப்பன்கிணறு என்ற இடத்திற்கு சென்று கேமராக்களை பொருத்திக்கொண்டிருந்தனர். அப்போது புதர்மறைவில் இருந்த யானை ஒன்று மகேந்திரன் உட்பட 4 பேரையும் துரத்தியது. 4 பேரும் யானையிடமிருந்து தப்பிப்பதற்காக காட்டுக்குள் ஓடினார்கள். அப்படியிருந்தும் அந்த யானை வனக்காப்பாளர் மகேந்திரனை தனது தும்பிக்கையால் துரத்திப்பிடித்து அந்த இடத்திலேயே மிதித்துக்கொன்றது.

இதைக்கண்ட வேட்டைத்தடுப்புக் காவலர்கள் பதறியபடி உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானையை துப்பாக்கி சத்தம் மற்றும் பட்டாசு மூலம் விரட்டியடித்துவிட்டு மகேந்திரனின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

யானை தாக்கி வனத்துறை ஊழியர் பரிதாபமாக பலியான சம்பவம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறை பணியாள்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்த வனக்காப்பாளர் மகேந்திரனுக்கு வெண்ணிலா என்ற மனைவியும், சிறு வயதில்  இரு மகன்களும் உள்ளனர். இவை குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிந்துள்ளார்கள். 

சார்ந்த செய்திகள்

Next Story

தண்ணீர் தேடி அலையும் யானை கூட்டம்-வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Herd of elephants wandering in search of water - forest department warns motorists

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான்கள் உட்பட  ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.  இதில் ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் கிராமத்துக்குள் புகுவதும் விளை நிலங்களை சேதப்படுத்துவதும், சாலை வரும் வாகனங்களை நிறுத்தி உணவு இருக்கிறதா என்று தேடிப் பார்ப்பதுமாக அலைந்து வருகிறது.  

இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை கூட்டம் உணவு-தண்ணீர் தேடி சாலையை கடந்து சென்றது. யானை கூட்டத்தை கண்ட வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை நிறுத்தினர். பின்னர் சிறிது நேரத்தில் அந்த யானைகள் கூட்டம் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னர் வாகன ஓட்டிகள் சென்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் உணவு தண்ணீரை தேடி யானைகள் கூட்டம் அடிக்கடி சாலையோரம் வருகிறது. வாகனங்களை நிறுத்தி உணவு இருக்கிறதா என்று தேடிப் பார்க்கிறது. எனவே வாகன ஓட்டிகள் இந்தப் பகுதியைக் கடக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம். அதைப்போல் யானை கூட்டங்களை செல்போனில் படம் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Next Story

ஊருக்குள் நுழைந்த காட்டு யானை; அச்சத்தில் கிராம மக்கள்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
A wild elephant entered the town; Villagers in fear

கோவையில் வேடப்பட்டியில் திடீரென காட்டு யானை ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் பேரூர் அடுத்துள்ள வேடப்பட்டி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே ஒற்றை காட்டு யானை ஒன்று திடீரென ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தி வருகிறது. அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் தோட்டங்களில் முகாமிட்டு பெரும் அச்சுறுத்தல் கொடுத்து வருகிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கரடிமடை பகுதிக்கு வந்த காட்டு யானை தாக்கியதில் நான்கு பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை பேரூர் வேடப்பட்டி சாலை வழியாக ஒற்றை காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. சுமார் 20 கிலோமீட்டர் வனப்பகுதியில் இருந்து கடந்து வந்துள்ள காட்டு யானை தனியார் கல்லூரியின் பின்புறத்தில் முகாமிட்டுள்ளது.

காட்டு யானையை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்த கோவை வனச்சரக வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. காட்டு யானை சுற்றி வருவதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒற்றைக் காட்டுயானை ஊருக்குள் புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.