Skip to main content

10 ஆண்டுகள் தலைமறைவு; கணவரை கொன்ற மனைவி, ஆண் நண்பருடன் கைது

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
wife who incident her husband after 10 years of absconding was arrested

கடலூர் மாவட்டம் சிதம்பரம் உட்கோட்டம் சிதம்பரம் நகர காவல் நிலைய கனக சபை நகரை சேர்ந்த அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சம்பத் என்பவரின் மனைவி கிரண் ரூபணி என்பவருக்கும், கன்னியாகுமரியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் சமூக வலைத்தளத்தின் மூலம் பழக்கம் ஏற்பட்டு, இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதற்கு இடையூறாக இருந்த கணவர் சம்பத் என்பவரை கொலை செய்ய திட்டம் தீட்டி முட்லூர் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் அமீர் பாஷா என்பவரின் உதவியுடன் கடந்த 30.8.2013 அன்று நள்ளிரவு ஒரு மணி அளவில் கார் ஏத்தி கொலை செய்து, அந்த கொலையை விபத்தாக மாற்றுவதற்கு மூவரும் முயற்சி செய்தனர்.

இதனை புலனாய்வு செய்த அப்போதைய சிதம்பரம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளரும், தற்போதைய மாவட்ட எஸ்பியுமான ராஜாராம், தகுந்த சாட்சியத்துடன், நடந்தது விபத்து இல்லை என்று கண்டறிந்து மூவரையும் கொலை வழக்கில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார். பின்னர் இந்த வழக்கில் புலன் விசாரணை முடித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் மூவரும் நீதிமன்ற பிணை பெற்று வெளியே சென்றனர். வழக்கு விசாரணையை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் மூவருக்கும் சிதம்பரம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. பிடியாணையை நிறைவேற்ற முடியாமல் நிலுவையில் இருந்ததால், வழக்கு மேற்கொண்டு விசாரணை செய்ய முடியாத நிலையில் இருந்தது. 

இந்நிலையில், இவ்வாண்டின் துவக்கத்தில் ராஜாராம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்றவுடன் தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் ரகுபதி மேற்பார்வையில் நகர காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் விழுப்புரம், மங்கலம்பேட்டை, சென்னை, கன்னியாகுமரி, பெங்களூரு போன்ற இடங்களில் விசாரித்த போது கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வழக்கின் மூன்றாவது குற்றவாளி அமீர் பாஷா என்பவரை தனிப்படை போலீசார் விழுப்புரத்தில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய ராஜேஷ் மற்றும் கிரண் ரூபிணி ஆகியோர் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலின் படி சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் ஆறுமுகம், சிறப்பு உதவியாளர் புருஷோத்தமன், தலைமை காவலர் ரமேஷ் ராமநாதன், பெண் காவலர்கள் சுதா, புனிதா ஆகியோர் சென்று தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்து அழைத்து வந்தனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

விபத்தில் சிக்கி உயிரிழந்த காவலரின் கண்கள் தானம்!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Eye donation of a policeman who passed away in a two-wheeler accident

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை, இவர் வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 28  ஆம் தேதி இரவு அண்ணாமலை தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் நாட்றம்பள்ளி நோக்கிச்சென்று கொண்டிருந்த போது, கல்லாறு என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோர  தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் அண்ணாமலையும் மற்றும் அவரது நண்பரும் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை பலனளிக்காமல் அண்ணாமலை 29 ஆம் தேதி மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவலர் அண்ணாமலையின் கண்களை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார்.