திருச்சி, தில்லைநகர் ஏழாவது கிராஸ் பகுதியில் உள்ள செங்குளத்தான் கோயில் தெருவில், காதல் திருமணம் செய்துகொண்ட ராஜேஸ்வரி - தவசீலன் தம்பதியினர், தனது 2 குழந்தைகளுடன் வசித்துவந்தனர். தவசி, ஒரு உணவகத்தில் பணிபுரிந்து வருகிறார். ராஜேஸ்வரி வீட்டு வேலை செய்து வருகிறார். இவர்கள் இரண்டு பேருக்கும் கடந்த சில நாட்களாகக் கருத்து வேறுபாடு இருந்ததாகக் கூறப்படுகிறது.
காதலித்து மணம் முடித்துக் கொண்ட இவர்களுக்கு, இரு குழந்தைகள் உள்ள நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான தவசீலன், பல இடங்களில் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று அவர் தனது இரு சக்கர வாகனத்தை விற்றுவிட்டு சொந்த ஊரான மன்னார்குடிக்குப் போகலாம் என மனைவியை வற்புறுத்தியுள்ளார். இருப்பினும் ராஜேஸ்வரி, அதற்குச் சம்மதிக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே தகராறு எழுந்துள்ளது.
இந்தச் சூழலில், இன்று அதிகாலை 5 மணி அளவில் குழந்தைகள் இருவரும் விழித்திருக்கும்போது, அவர்களின் கண் முன்னே தனது மனைவியை கம்பால் அடித்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார் தவசீலன். பிறகு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். தகவல் அறிந்த தில்லை நகர் போலீசார் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தப்பி ஓடிய தவசீலனை தேடி வருகின்றனர்.
பெற்ற குழந்தைகள் முன்பு தாயைக் கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.