
கிருஷ்ணகிரி மாவட்டம், வாடமங்கலத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (52). இவருடைய மனைவி மாது. மகேஸ்வரன், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையில் காவலராகப் பணியாற்றி வந்துள்ளார்.
கணவன், மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாட்டால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், பல ஆண்டுக்கு முன்பு மாது தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு விரக்தியில் இருந்த மகேஸ்வரன், காவல்துறை பணியில் இருந்து விலகி, விவசாயம் செய்து வந்துள்ளார். மேலும், இந்திராகாந்தி (40) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கின்றனர்.
இந்நிலையில், மகேஸ்வரனுக்கும், இந்திராகாந்திக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் அவர்களை பலமுறை சமாதானம் செய்து வைத்துள்ளனர். நேற்று முன்தினமும் (ஆக. 11) அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மகேஸ்வரன், இரும்புக் கம்பியை எடுத்து மனைவியை சரமாரியாக தாக்கினார். இதில் இந்திராகாந்தின் தலை, உடம்பில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத் தடுக்க வந்த 18 வயது மகனையும் தாக்கினார்.
பலத்த காயம் அடைந்த இருவரையும் அப்பகுதியினர் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இந்திராகாந்தி உயிரிழந்தார். மனைவி இறந்துவிட்டதை அறிந்த மகேஸ்வரன் திடீரென்று தலைமறைவாகிவிட்டார். இச்சம்பவம் குறித்து போச்சம்பள்ளி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தர்மபுரியில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த மகேஸ்வரனை காவல்துறையினர் வியாழக்கிழமை (ஆக. 12) கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.