Skip to main content

கணவரின் மிரட்டல்; மரண வாக்குமூலத்தில் உண்மையைச் சொன்ன மனைவி

Published on 28/11/2022 | Edited on 28/11/2022

 

Wife passed away police arrested her husband

 

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகில் உள்ள ஆசாரங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் சங்கீதா(24). இவர், அதே பகுதியில் உள்ள காட்டேரிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமரன் என்பவரைக் காதலித்துள்ளார். திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சங்கீதாவும் முத்துக்குமரனும் குடும்பத்தினரை மீறி  ஐந்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு வெளியூரில் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தையும், நான்கு மற்றும் ஒன்றரை வயதுகளில் இரு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

 

இந்த நிலையில், முத்துக்குமரன் மது போதைக்கு அடிமையாகியுள்ளார். இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 4ம் தேதி மாலை சமைப்பதற்கு அரிசி வாங்கி வரும் படி சங்கீதா, கணவர் முத்துக்குமரனிடம் பணம் கொடுத்து அனுப்பியுள்ளார். ஆனால், முத்துக்குமரன் அந்தப் பணத்தை டாஸ்மாக் கடையில் கொடுத்து மது வாங்கி குடித்து விட்டு இரவு 11 மணிக்கு மேல் வீட்டிற்கு போதையில் வந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த சங்கீதா, தன் கணவரிடம் சண்டை போட்டுள்ளார். மீண்டும் முத்துக்குமரன் மறுநாள் குடிப்பதற்கு சென்றுள்ளார். 

 

இனிமேல் கணவரைத் திருத்த முடியாது என்று மனமுடைந்த சங்கீதா, தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். உடலில் தீக்காயம் ஏற்பட்டு அலறி துடித்துள்ளார். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி சங்கீதா உயிரிழந்துள்ளார். 

 

அவர் இறப்பதற்கு முன்பு காவல்துறையினர் அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அப்போது அவர், “வீட்டில் கணவருக்கும் எனக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவும், கணவர் திருந்த வேண்டும் என்பதற்காகவும், கணவரை மிரட்டும் நோக்கத்திலும் என் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிப்பது போல் பாவனை செய்தேன். அப்போது வீட்டுக்குள் வந்த என் கணவரே என் உடலில் தீ வைத்தார். உடல் முழுவதும் படுகாயம் அடைந்து நான் அலறி துடித்தேன். எனது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் என்னை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், என் கணவர் என்னுடன் வரவில்லை. அக்கம்பக்கத்தினர் சண்டை போட்டதால் என்னுடன் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது என் கணவர் நான் தீக்குளித்தது தொடர்பாக போலீசிடமோ, நீதிபதியிடமோ, மருத்துவரிடமோ தன்னைப் பற்றி எதுவும் சொல்லக்கூடாது. அப்படி கூறினால் உன்னைப்போலவே குழந்தையையும் தீ வைத்து கொளுத்தி விடுவேன் என்று மிரட்டினார். அவரது மிரட்டலுக்கு பயந்து நான் மருத்துவரிடம் பொய்யான வாக்குமூலம் அளித்தேன். நான் இப்போது கூறுவது தான் உண்மை” என்று இறப்பதற்கு முன்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

 

சங்கீதாவின் தந்தை சக்திவேல், தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அளித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் உடலில் கணவரே தீவைத்து கொலை செய்த சம்பவம் கண்டமங்கலம் பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.