ஈரோடு கருங்கல்பாளையம் கே.எஸ் நகர் பகுதியில் உள்ள காளிங்கராயன் வாய்க்காலில் வியாழன்(22.12.2022) காலை ஒரு பெண்ணின் உடல் வாய்க்கால் நீரில் மிதந்து வந்தது. இது குறித்து கருங்கல்பாளையம் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்தப் பெண்ஈரோடு மாவட்டம் சித்தோட்டையடுத்த ஆர்.என்.புதூரைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரின் மனைவி பாசமலர்(48) என்பது தெரிய வந்தது. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். அவர்களது மகளுக்கும் திருமணம் ஆகி கணவருடன் வேறு பகுதியில் வாழ்ந்து வருகிறார். கணவன் திருநாவுக்கரசு கட்டட வேலை செய்து வருகிறார். மனைவி பாசமலர் கூலி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கணவன் - மனைவி இருவருக்கும் இடையே குடும்பத்தகராறு அடிக்கடி இருந்து வந்துள்ளது. அந்த வகையில் புதன் கிழமையன்றுஇருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதனால் மனவேதனையடைந்த மனைவி பாசமலர் ஆர்.என்.புதூர் அருகே ஓடும் காளிங்கராயன் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பம் நடத்த போதிய வருவாய் இல்லாததால் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டு இந்த தற்கொலை நிகழ்ந்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.