Old man arrested

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள அத்தியூரைச் சேர்ந்தவர் நடராஜன். 61 வயதாகும் இவருக்கு, அஞ்சலை (51) என்ற மனைவியும், ராஜா என்ற மகனும், லட்சுமி என்ற மகளும் உள்ளனர். மகன், மகளுக்கு திருமணமாகி விட்டது.

Advertisment

மகன், மகளுக்கு திருமணம் செய்து கொடுத்த பின்னர் நடராஜன் - அஞ்சலை ஆகியோர் தனியாக வசித்து வந்தனர். இவர்களது மகன் ராஜா சென்னையில் வசித்து வருகிறார். போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டதால், பழைய பேப்பர், பாட்டில்களை சேகரித்து, அதனை விற்று குடும்பம் நடத்தி வந்தார் நடராஜன். இதனிடையே கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். அக்கம் பக்கத்தில் இந்த வயதில் தன்னை சந்தேகப்படுகிறார், இதனால் அடிக்கடி தங்களுக்குள் சண்டை நடப்பதாக அஞ்சலை கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் நடராஜன், அஞ்சலையின் நடத்தையில் சந்தேகப்பட்டு சம்பவத்தன்று இரவு வீட்டில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நடராஜன் அருகே கிடந்த கட்டையை எடுத்து அஞ்சலையை தாக்கினார். இதில் படுகாயமடைந்து கீழே விழுந்த அஞ்சலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக அக்கம் பக்கத்தினர் மங்களமேடு காவல்நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர்.

Advertisment

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அஞ்சலையின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நடராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.