Wife incident for refusing to cook food

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரத்தில் உள்ள முல்லை நகர் பகுதியில் வசித்து வருகின்றனர் மூர்த்தி(58) - அனுசியா(55) தம்பதியினர். இவர்களுக்கு பவித்ரா(21), அபித்ரா(18) என இரு மகள்கள் உள்ளனர். ஒருவர் புதுச்சேரியிலும், மற்றொருவர் கோவையிலும் படித்து வருகின்றனர். அதனால் கணவன் - மனைவி மட்டுமே வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அனுசியாவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

Advertisment

கடந்த 27 ஆம் தேதி பவித்ரா தனது தாய் அனுசியாவிற்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போன் எடுக்காததால், தந்தை மூர்த்திக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் சரிவர பதிலளிக்காததால், சந்தேகமடைந்த மகள் பவித்ரா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மூன்று நாட்களாக அவரது தாயின் அறை திறக்கப்படாமல் இருந்த நிலையில் கதவை திறந்து பார்த்தபோது அனுசியா உயிரிழந்து அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தினர்.

Advertisment

இதற்கிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில், அனுசியா கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், அவரது உடலில் அதிக இடங்களில் காயம் இருப்பதால் இது கொலைதான் என்றும் கூறப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் கணவர் மூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டதில் மனைவியை தலையணை வைத்து அழுத்தியும் கழுத்தை நெரித்தும் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்

விசாரணையில், அனுசியாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். தினசரி ஹோட்டலில் சாப்பாடு டிபன், வாங்கி வந்து சாப்பிட்டு வந்தோம். இது எனக்கு பிடிக்கவில்லை. எனவே மனைவியை சமைக்குமாறு கூறினேன். அவர் அதற்கு மறுத்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் எனது மனைவி படுத்திருந்த அறைக்கு சென்று தலையணையை எடுத்து அவரது முகத்தை வைத்து அழுத்தி கொலை செய்தேன். கடந்த மூன்று நாட்களாக அனுசுயாவின் உடலை அறைக்குள்ளே வைத்து பூட்டிவிட்டு மனநிலை பாதிக்கப்பட்டது போல் நாடகமாடியதாக தெரிவித்தார். இதையடுத்துபோலீசார் இந்த வழக்கை கொலை வழக்காகப் பதிவு செய்து அனுசுயாவின் கணவர் மூர்த்தியைக் கைது செய்தனர்.