Skip to main content

மனைவியைக் கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை!

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

wife passes away due to husband worse treating sentenced to life imprisonment...
                                                            ஆனந்த்

 

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள கோட்டகரையைச் சேர்ந்தவர் 28 வயதான ஆனந்த். இவரது மனைவி நவநீதம் (25). இவர்கள் இருவருக்கும் கடந்த 2008ஆம் ஆண்டு, பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் திருமணம் நடைபெற்றது.

 

இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரு பிள்ளைகள் உள்ளனர். ஆனந்த் தச்சு வேலை செய்து வருகிறார். தினசரி உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தை, குடும்பம் நடத்துவதற்கு மனைவியிடம் கொடுக்காமல், குடித்துவிட்டு மனைவி நவநீதத்தைக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

 

அதோடு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை அடித்து உதைத்துச் சித்ரவதை செய்துவந்துள்ளார். இந்தநிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி, வழக்கம் போல குடிபோதையில் வீட்டுக்குச் சென்ற ஆனந்த், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்துள்ளார்.

 

தகராறு நடக்கும்போது வீட்டில் இருந்த குறுவாளை எடுத்து மனைவி நவநீதம் தலையில் வெட்டியுள்ளார். இதனால், படுகாயமடைந்த நவநீதம் சத்தம் போட்டுள்ளார். இவரது சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து  நவநீதத்தை மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தனர். சில தினங்களில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நவநீதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

இதுகுறித்து அவரது தந்தை ஏழுமலை அளித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். இது சம்பந்தமான வழக்கு விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில், அனைத்துத் தரப்பு சாட்சிகளிடமும் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி சாந்தி அவர்கள் இந்த வழக்கில் தீர்ப்பு கூறினார்.

 

அந்தத் தீர்ப்பில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலைசெய்த கணவன் ஆனந்துக்கு ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பு வழங்கினார். சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஆனந்தை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறைக்குக் கொண்டு சென்று அடைத்தனர்.

 

இவ்வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் ராதிகா செந்தில் ஆஜராகி, தகுந்த ஆதாரங்களுடனும் சாட்சிகளுடனும் வாதாடி குற்றவாளிக்குத் தண்டனை கிடைக்க வழி செய்துள்ளார். மனைவியைக் கொலை செய்த கணவனுக்கு ஆயுள்தண்டனை கிடைத்துள்ளது விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.