Skip to main content

“இடையூறாக இருந்ததால் என் கணவரை கொன்றுவிட்டோம்” - மனைவி பகீர் வாக்குமூலம்

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

wife has given a statement as to why she accident her husband
பெரியசாமி

 

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ஒருவந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட செல்லிபாளையத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (37). கட்டட மேஸ்திரியான இவருடைய மனைவி பிரேமா (35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.  ஆக. 23ம் தேதி, அதிகாலை 2.30 மணியளவில் பிரேமா தனக்கு திடீரென்று காது வலிப்பதாகக் கூறி, உடனடியாக டாக்டரிடம் கூட்டிச் செல்லுங்கள் இல்லாவிட்டால் செத்து விடுவேன் போலிருக்கிறது. அந்தளவுக்கு காது வலிக்கிறது எனக் கூறியிருக்கிறார் பிரேமா.

 

இதையடுத்து பெரியசாமி, தனது மோட்டார் சைக்கிளில் மனைவியை அமர வைத்துக் கொண்டு, மோகனூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பொய்யேரிக்கரை பாலம் அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலேயே பெரியசாமி  உயிரிழந்துவிட்டதாகக் கூறி, மோகனூர் காவல்நிலையத்திற்கும் உறவினர்களுக்கும் பிரேமா தகவல் அளித்தார். காவல்துறையினரும் பெரியசாமி சாலை விபத்தில் இறந்துவிட்டதாக வழக்குப்பதிவு செய்தனர். சடலத்தை உடற்கூராய்வு செய்த பிறகு,  மனைவியிடம் ஒப்படைத்தனர். பெரியசாமியின் உறவினர்கள், அவர்களின் வழக்கப்படி சடலத்தை அடக்கம் செய்து முடித்தனர்.     

 

இது ஒருபுறம் இருக்க, சாலை விபத்தில் பெரியசாமி மட்டும் உடலில் காயங்களுடன் உயிரிழந்துவிட, அவருடன் வாகனத்தில் சென்ற பிரேமா  மட்டும் சிறு காயமின்றி உயிர் தப்பியது எப்படி என காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. அது மட்டுமின்றி, பெரியசாமி ஓட்டிச் சென்ற வாகனத்திற்கு சிறு சேதம் கூட ஏற்படாமல் இருந்ததும், காது வலியால் உயிர் போகிறது என்று அலப்பறை செய்த பிரேமா அதன்பிறகு டாக்டரிடம் செல்லாமல் சாதாரணமாக நடமாடியதும் பலத்த சந்தேகங்களைக் கிளப்பியது. கணவர் கண் முன்னே இறந்தும் கூட அதற்காக வருத்தப்படாமல் எப்போதும்போல் இருந்ததும் அவர் மீதான சந்தேகத்தை வலுவாக்கியது. இதனால் சந்தேகத்தின் பேரில் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போதுதான் பெரியசாமி சாலை விபத்தில்  இறக்கவில்லை என்பதும், அவரை பிரேமா தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்துவிட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடிய திடுக்கிடும் தகவல்களும் தெரிய வந்தன.     

 

wife has given a statement as to why she accident her husband
பிரேமா

 

மோகனூர் காவல்துறையினர், பிரேமாவின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். கடந்த ஒரு மாதமாக அவருடன் யார் யார் அடிக்கடி  தொடர்பில் இருந்தனர்? பெரியசாமி இறந்ததாகச் சொல்லப்பட்ட நாளில் பிரேமா யார் யாருடன் பேசியுள்ளார்? என்பது குறித்த சிடிஆர் அறிக்கையைப் பெற்று விரிவான விசாரணை நடத்தினர். இதில், தர்மபுரி மாவட்டம் நாட்றாம்பள்ளியைச் சேர்ந்த கேசவன் என்கிற நந்திகேசவன் (28) என்ற வாலிபருடன் பிரேமா அடிக்கடி மணிக்கணக்கில் பேசி வந்திருப்பது தெரிய வந்தது. மேலும் அவர்களுக்குள் இருந்த பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதை எப்படியோ கண்டுபிடித்துவிட்ட பெரியசாமி அவர்களைக் கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தான் கணவன் என்றும் பாராமல் பிரேமா, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து பெரியசாமியை அடித்துக் கொலை செய்துவிட்டு, விபத்தில் இறந்ததாக சித்தரித்துள்ளார். காவல்துறை விசாரணையின்போது இதை பிரேமாவும் ஒப்புக்கொண்டார்.     

 

மேலும், நந்திகேசவனை தூக்கி வந்த காவல்துறையினர் அவரிடமும் விரிவான விசாரணை நடத்தினர். நாங்கள் சந்தோஷமாக வாழ பெரியசாமி தொடர்ந்து இடையூறாக இருந்ததால் அவரை போட்டுத் தள்ளிவிட்டோம் என்றும் ஒப்புக்கொண்டார் விசாரணையின் போது, பிரேமா அளித்துள்ள வாக்குமூலம் குறித்து காவல்துறையினர் நம்மிடம் சில விவரங்களைச் சொன்னார்கள், “என் கணவர் ஒருவர் மட்டுமே சம்பாதிப்பது குடும்பம் நடத்த போதுமானதாக இல்லை. அதனால் நானும் ஒரு பேக்கரி கடைக்கு வேலைக்குச்  சென்று வந்தேன். அதே கடையில் கேசவன் என்கிற நந்தி கேசவனும் வேலை செய்து வந்தார். அப்போது எங்களுக்குள் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கணவன், மனைவி போல வாழத் தொடங்கினோம். எங்களுக்குள்  இருக்கும் உறவை எப்படியோ என் கணவர் கண்டுபிடித்துவிட்டார். இனிமேல் கேசவனை சந்திக்கக் கூடாது என்று எச்சரித்தார். ஒருநாள் அவர், பேக்கரி கடைக்கே வந்து என்னையும், கேசவனையும் ஆபாசமாகத் திட்டினார். இனிமேல் வேலைக்குச் செல்லக்கூடாது என்றுகூறி என்னை வேலையை விட்டு என் கணவர் நிறுத்திவிட்டார். 

 

இதற்கிடையே, பேக்கரி கடைக்காரரும் கேசவனை வேலையை விட்டு நிறுத்திவிட்டார். அதன்பிறகு கேசவன், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் உள்ள ஒரு பேக்கரியில் வேலைக்குச் சேர்ந்தார். இதனால் எங்களால் அடிக்கடி சந்திக்க முடியவில்லை. ஆனாலும் செல்போன் மூலம் பேசி வந்தோம். இதை அறிந்த என் கணவர் செல்போனையும் பறித்து வைத்துக் கொண்டார். என் கணவருடன் எனக்கு சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கவில்லை. நான் ஒரு சிறைக்கைதி போல உணர்ந்தேன். எனக்குப் பிடித்தமான வாழ்க்கை வாழவும் அவர் முட்டுக்கட்டையாக இருந்தார். என் கணவர் உயிருடன் இருக்கும் வரை, நாம் நிம்மதியாக வாழ முடியாது என கேசவனிடம் சொன்னேன். அதனால் அவரை தீர்த்துக் கட்டிவிட முடிவு செய்தோம்.

 

அதன்பிறகுதான், சம்பவத்தன்று அதிகாலையில் எனக்கு காது வலிப்பதாகக் கூறி அவரை மோகனூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினேன். நானும் கேசவனும் ஏற்கனவே போட்டு வைத்திருந்த திட்டத்தின்படி, பொய்யேரிக்கரை பாலம் அருகே சென்றபோது எங்கள் மோட்டார் சைக்கிளை கேசவனும், கேசவனுக்கு உதவியாக வந்த அவருடைய நண்பர் தனுஷ் என்பவரும் வழிமறித்து தடுத்து நிறுத்தினர். அவர்கள் இருவரும் என் கணவரை இரும்பு கம்பியால் தாக்கினர். கணவர் தாக்கப்படும்போது அவர் அலறி துடித்ததை பார்க்க முடியாமல் நான் கண்களை மூடிக்கொண்டேன்.  பலத்த காயம் அடைந்த என் கணவர் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். அவர் இறந்துவிட்டாரா? அல்லது உயிருடன் இருக்கிறாரா? என்பதை மார்பில் காதை வைத்து இதயத் துடிப்பு இருக்கிறதா என்பதை சோதித்துப் பார்த்தோம். இறந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்தியதை அடுத்து கேசவனையும், தனுஷையும் அங்கிருந்து அனுப்பிவிட்டேன்.     

wife has given a statement as to why she accident her husband
தனுஷ் - கேசவன்

 


அதையடுத்து, கணவர் சாலை விபத்தில் இறந்துவிட்டதாக எங்கள் உறவினர்களுக்கு தகவல் அளித்தேன். அவர்களும், காவல்துறையினரும் நான் சொன்னதை நம்பி விட்டனர். ஆனால் சந்தேகத்துக்குரிய என் நடவடிக்கையால் தான் நாங்கள் காவல்துறையில் சிக்கிக் கொண்டோம்” என்று பிரேமா விசாரணையின் போது கூறியதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.     

 

இதையடுத்து பிரேமா, கேசவன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் (23) ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். நாமக்கல் நீதிமன்றத்தில ஆஜர்படுத்திய பிறகு, மூவரையும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். திருமணத்தை மீறிய உறவால் கணவரை கொன்றுவிட்டு, விபத்தில் இறந்ததாக மனைவி நாடகமாடிய சம்பவம் மோகனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் திடீர் மரணம்; கணவர் பரபரப்பு புகார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Family planning woman passed away suddenly

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (30). இவரது மனைவி துர்கா (27). கடந்த 2018ல் இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு நான்கரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், 2-வது பிரசவத்துக்காக கடந்த 20ம் தேதி துர்காவை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அன்றைய தினம் மதியம் சுக பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர். தொடர்ந்து, நேற்று முன் தினம் காலை துர்காவுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்பட்டது. மாலையில் அவருக்கு 106 டிகிரி அளவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவர்கள், உயர் சிகிச்சைக்காக துர்காவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த துர்கா, சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனது மனைவிக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள் தவறான சிகிச்சையளித்தன் காரணத்தால் தான் தன் மனைவி இறந்துவிட்டார். எனவே, உரிய முறையில் பிரேத பரிசோதனை செய்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் பன்னீர் செல்வம், புளியம்பட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

இளம் பெண் ரயில் நிலையம் அருகே கொடூரக் கொலை; பின்னணி என்ன ?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
A young woman from Chennai was passed away near Gudiyattam railway station

வேலூர் மாவட்டம் குடியாத்தம், சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தீபா. 30 வயதான இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் திருமணமாகி விவாகரத்து பெற்று தனது தாயாருடன் வசித்து வந்தார்.

கடந்த 14ஆம் தேதி அலுவல் காரணமாக குடியாத்தம் சென்று வருவதாக தனது தாயாரிடம் கூறிவிட்டு வந்தவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்புகொண்டபோது அது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. எங்கே போனாலும் மகள் தினமும் தன்னுடன் பேசிவிடுவார் அப்படி இருக்க செல்போன் சுவிட்ச் ஆப் செய்து விட்டார். தன்னையும் தொடர்பு கொள்ளவில்லை என்பதால் அவர் பயந்து போனார்.

இதுகுறித்து அவரது தாயார் கடந்த 16ஆம் தேதி சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட புளியந்தோப்பு போலீசார் செல்போன் எண்களை ஆராய்ந்து அம்பத்தூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த குடியாத்தம் அடுத்த சின்ன நாகால் பகுதியை சேர்ந்த ஹேம்ராஜ் (25) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மொபைல் கடையில் பணியாற்றி வந்த தீபா உடன் ஹேம்ராஜிற்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு காட்பாடி ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இளம் பெண்ணை தள்ளிவிட்ட வழக்கில் ஹேம்ராஜ் 11 மாதங்கள் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். இதனிடையே இவரது மொபைல் எண்ணிற்கு தீபா குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளார். இதனை அடுத்து நீண்ட நாட்களுக்குப் பிறகு பேசிய ஹேம்ராஜ் தான் ரயில்வேயில் பணிக்காக தேர்வுக்காக தயாராகி வருவதாகவும் நீயும் ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் அதற்கான புத்தகங்கள் தன்னிடம் உள்ளதாக கூறி கடந்த 14ஆம் தேதி குடியாத்தம் ரயில்வே நிலையத்திற்கு தீபாவை ஹேம்ராஜ் வரவழைத்துள்ளார்.

இதனையடுத்து குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள மலையடிவாரத்திற்கு தீபாவை அழைத்துச் சென்று அங்கு தீபாவுடன் தனிமையில் இருந்துள்ளார். அங்கே இருவருக்கும் உருவான பிரச்சனையில் தீபா தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து சென்னைக்குச் சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்து ஹேமராஜை கைது செய்த குடியாத்தம் போலீசார் கொலைக்கான காரணம் உண்மைதானா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயிலில் இருந்து ஒரு பெண்ணை கீழே தள்ளி கொலை குற்ற வழக்கில் சிறையில் இருந்தவன், ரயில்வே தேர்வு எழுதுகிறேன் என ஒரு படித்த பெண்ணிடம் சொல்ல இதை அவர் எப்படி நம்பினார்? இவன் சொல்வது உண்மையான காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என தீவிரமாக புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னையில் காணாமல் போன இளம் பெண் குடியாத்தம் ரயில் நிலையம் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.