Skip to main content

இறந்தும் என் கணவர் வாழட்டும்; ஆசிரியர் மனைவியின் நெகிழ்ச்சியான செயல்

Published on 03/07/2023 | Edited on 03/07/2023

 

 wife donates her husband's organs after his passed away

 

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டிக்கு அருகேயுள்ளது மணியம்பாடி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். 45 வயதான இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதிக்கு 14 மற்றும் 8 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், தனது குடும்பத்தோடு மகிழ்ச்சியோடு இருந்து வந்த ஆசிரியர் செந்தில்குமார், கடந்த 28 ஆம் தேதி பள்ளிக்குச் சென்று அன்றைய தின வகுப்புகளை முடித்துவிட்டு மாலை வீட்டுக்கு வந்துள்ளார். 

 

செந்தில்குமார் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த உடன் வாக்கிங் செல்வது வழக்கம். அதன்படி அன்று மாலை கடத்தூர் ஒடசல்பட்டி சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த டூவீலர் ஒன்று எதிர்பாராத நேரத்தில் திடீரென செந்தில்குமார் மீது மோதியிருக்கிறது. இதில், பலத்த காயங்களுடன் மயக்க நிலையில் கிடந்த செந்தில்குமாரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு முதலுதவி அளித்து ஆம்புலன்ஸ் மூலமாக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

 

அதன்பிறகு, இந்த விபத்து குறித்த தகவலறிந்து செந்தில்குமாரின் மனைவி மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். அங்கு, செந்தில்குமாருக்கு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்த மருத்துவர்கள், அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதனால் பெரும் அதிர்ச்சிக்குள்ளான மனைவி மற்றும் குடும்பத்தார் அங்கேயே கதறி அழுதுள்ளனர். அதன் பிறகு, மருத்துவமனைக்கு வந்திருந்த செந்தில்குமாரின் நண்பர்கள், மூளைச்சாவு அடைந்ததால் அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்யலாம் என அவரின் மனைவி விஜயலெட்சுமிக்கு அறிவுரை கூறியுள்ளனர். அதன்படி, செந்தில்குமாரின் உடல் உறுப்புகளை அவரின் மனைவி மற்றும் குடும்பத்தார் தானம் செய்துள்ளனர். இதனையடுத்து, தருமபுரி அரசு மருத்துவமனையில் செந்தில்குமாரின் இதயம், கண்கள், சிறுநீரகம், நுரையீரல் போன்ற உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

 

இதுகுறித்த செந்தில்குமாரின் மனைவி விஜயலெட்சுமியிடம் கேட்ட போது, தனது கணவர் வாக்கிங் செல்லும்போது எதிர்பாரா விதமாக விபத்துக்குள்ளாகியுள்ளார். அவரை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும் அவரைக் காப்பற்ற முடியவில்லை. அவர் மூளைச்சாவு அடைந்திருக்கிறார் என டாக்டர்கள் முடிவாகக் கூறியதும், அவர்தான் வாழவில்லை அவரின் உறுப்புகளாவது உயிரோடிருக்கட்டும் என்பதற்காக அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாகக் கூறியுள்ளார். மேலும், தமது குடும்பம் கணவர் செந்தில்குமாரின் வருமானத்தில் மட்டுமே இயங்கி வந்ததாகவும், தற்போது அவர் இல்லாததால் தங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது எனவும் கூறியிருக்கிறார். அதனால், அரசு கருணை அடிப்படையில் ஏதேனும் ஒரு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Incident happened to children on love affair in dharmapuri

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி (24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில், தேவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இவர்களது உறவு பாலகிருஷ்ணனுக்கு தெரியவர, தேவியைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து, தேவி திடீரென வெங்கடேஷ் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தேவியை பழிவாங்கும் நோக்கத்தில் இருந்து வந்துள்ளார். அதன் அடிப்படையில், அவர் நேற்று முன் தினம் (10-04-24) வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த தேவியின் மகன்கள் இருவரையும் அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற வெங்கடேஷ், குழந்தைகள் இருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவியும், கல்லால் தலை மற்றும் காது பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த குழந்தைகள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி வெங்கடேஷை கைது செய்தனர். இந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்த வெங்கடேஷ் நேற்று, காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு தப்பிச் சென்று அங்குள்ள மின் கம்பியைப் பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வெங்கடேஷ் மீது மின்சாரம் தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அங்கு விரைந்த போலீசார், வெங்கடேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.