ஆந்திர மாநிலம் தச்ஷாராம் பகுதியைச் சேர்ந்தவர் சிவபிரசாத் (36). இவர் ஆந்திர மாநிலம் ராஜ் மன்றி பகுதியைச் சேர்ந்த ஜான்சி என்பவரை 10 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைக்கு வந்து அங்கேயே ஹோட்டல் வைத்து இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சிவபிரசாந் கஞ்சாவிற்கு அடிமையாகி தினமும் கஞ்சா அடித்து விட்டு ஜான்சியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சிவபிரசாந்தின் தொந்தரவு தாங்காமல் ஜான்சி கணவர் பிரசாந்த் மீது மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மே மாதம் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் இருவரையும் அழைத்து வைத்து சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் ஏலகிரி மலையிலிருந்து ஜோலார்பேட்டை அடுத்த இடையப்பட்டி பகுதிக்கு கடந்த மே மாதம் குடியேறினர்.
இருந்த போதிலும் சிவபிரசாந்த் கஞ்சா அடிப்பதை நிறுத்தாமல் வீட்டிற்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் கஞ்சா செடிகளை நட்டு வைத்து அவருக்கு தேவைப்படும் நேரத்தில் கஞ்சாவை பறித்து அதனை பயன்படுத்தி வந்துள்ளார். மேலும் தினமும் மனைவியிடம் தகராறிலும் ஈடுபட்டு வந்துள்ளார். அதனை தொடர்ந்து வீட்டில் காஞ்சா செடியை வளர்த்து வருவதை கண்டுபிடித்த ஜான்சி இது குறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஜோலார்பேட்டை உதவி ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் வளர்த்து வந்த 5 கஞ்சா செடியைப் பறிமுதல் செய்து சிவபிரசாந்த்தை காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர். இது தொடர்பாக சிவபிரசாந்தின் மனைவி ஜான்சி கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் சிவபிரசாந்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கஞ்சா அடிப்பதற்காக தானே வீட்டின் பின்புறம் காஞ்சா செடிகளை வளர்த்து காஞ்சா அடித்து வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.