Skip to main content

போலீசார் தாக்கியதில் முதியவர் பலி? - மனைவி புகார்!

Published on 07/12/2021 | Edited on 07/12/2021

 

Wife complains that husband passed away in police attack?

 

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலையம் பகுதியில் உள்ளது சு. பில்ராம்பட்டு கிராமம். இந்தக் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்தக் கடையின் அருகே அதே ஊரைச் சேர்ந்த 67 வயது உலகநாதன் என்ற பெரியவர் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்துவந்துள்ளார். நேற்று (06.12.2021) மாலை அரகண்டநல்லூர் போலீசார் உலகநாதன் கடைக்குச்  சென்று அரசு டாஸ்மாக் கடை அருகில் பெட்டிக்கடை வைத்து நடத்தக் கூடாது எனவே கடையை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். அப்போது பெரியவர் உலகநாதன், நான் இங்கு நான்கு வருடமாக கடை நடத்திவருகிறேன்.

 

அப்படியிருக்கும்போது என் கடையைத் திடீரென வந்து காலி செய்ய சொல்வது ஏன்? என்று எதிர்த்து கேள்வி கேட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கோபமடைந்த போலீசார், உலகநாதனிடம் பெட்டிக்கடையை மூடிவிட்டு, காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு வற்புறுத்தியுள்ளனர். அப்போது போலீசாருக்கும் உலகநாதனுக்கும் வாக்குவாதம் நடந்துகொண்டிருந்த சமயத்தில் உலகநாதன் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்த அவரது மனைவி ராணி மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து உலகநாதனை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் உலகநாதன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த தகவல் அறிந்த உலகநாதன் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர், திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை முன்பு குவிந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. இதனால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். தனது கணவர் இறப்பு குறித்து அவரது மனைவி ராணி விழுப்புரம் துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். அதில், ‘என் கணவர் பெட்டிக்கடையில் பீடி, சிகரெட், வெற்றிலை பாக்கு, மிட்டாய், பிஸ்கட், சுண்டல், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை சிறிய அளவில் வைத்து விற்பனை செய்துவந்தார்.

 

இந்த நிலையில், நேற்று 4 போலீசார் அவரது கடைக்குச் சென்று வியாபாரம் செய்யக் கூடாது என்று மிரட்டியுள்ளனர். எனது கணவர் எதிர்த்து கேள்வி கேட்டதால் அவரை அடிக்க முயன்றனர். அதை என் கணவர் தடுத்துள்ளார். போலீசார் லத்தியால் தாக்கியதில் எனது கணவர் இறந்துவிட்டார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, எனது கணவர் இறப்புக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எனது கணவர் உயிரிழப்பிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என்று அவர் புகாரில் கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். போலீசார் தாக்குதலில் வயதான முதியவர் இறந்து போனதாக கூறி சு. பில்ராம்பட்டு கிராம மக்கள் பெரும் கோபம் கொண்டுள்ளனர். இதனால் பதற்றம் நிலவியதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.