Skip to main content

உணவில் விஷம் வைத்து கணவனைக் கொன்ற மனைவி கைது!

Published on 04/08/2021 | Edited on 04/08/2021
Wife arrested for made her husband passed away

 

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள அகரம் புதுமனை கிராமத்தைச் சேர்ந்தவர் சூரிமுத்து (வயது 70). இவரது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நிர்மலா (45) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 4 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் சூரி முத்துவிற்கு அவரது மனைவி நிர்மலா மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் திங்கட்கிழமை (02.08.2021) காலை அவர்களுக்குள் இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. சூரிமுத்து மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டார்.

 

அங்கு சூரிமுத்து அவருடைய உறவினர் என 3 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். அதேநேரத்தில் அடிக்கடி தகராறு செய்ததால் கணவரைக் கொலை செய்ய நிர்மலா திட்டமிட்டுள்ளார். இதற்காக கணவருக்கு உணவு சமைத்து, அதில் வி‌ஷம் கலந்துள்ளார். பின்னர், வி‌ஷம் கலந்த உணவை எடுத்துக்கொண்டு விவசாய நிலத்திற்குச் சென்று, உணவை சூரிமுத்துவிடம் கொடுத்துள்ளார். அவரும் அவருடைய உறவினர் காந்தராஜ் என்பவரும் அந்த உணவைச் சாப்பிட்டுள்ளார். அப்போது அங்கிருந்த மற்றொருவர் உணவில் வி‌ஷ வாடை வருவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் அந்த உணவை மீண்டும் முகர்ந்து பார்த்தபோது சந்தேகமடைந்துள்ளனர். உடனடியாக அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

 

அதற்குள் அவர்களது உடல்நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு சூரிமூத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உறவினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதில், நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் தொடர்ந்து தகராறு செய்ததால் நிர்மலா தனது கணவரைக் கொலை செய்ய உணவில் வி‌ஷம் கலந்து  கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து நிர்மலாவை கைது செய்தனர்.


 

சார்ந்த செய்திகள்