மனைவியை கழுத்து அறுத்து கொன்ற கூலித்தொழிலாளி!

wife and husband incident namakkal police investigation

நாமக்கல் அருகேபலமுறைகண்டித்தும் ரகசிய காதலனுடனான தொடர்பைக் கைவிடாததால் ஆத்திரத்தில் மனைவியைக் கழுத்தறுத்துக் கொலைசெய்த கூலித்தொழிலாளியைக் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே உள்ள நவணியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 25), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி நந்தினி (வயது 22). காதலித்துவந்த இவர்கள், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். நந்தினியின் சொந்த ஊர், நாமக்கல் அருகே உள்ள பாப்பிநாயக்கன்பட்டி ஆகும்.

இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. கடந்த சில மாதங்களாக நந்தினி, செல்ஃபோனில் வேறொரு வாலிபருடன் நீண்ட நேரம் பேசிவந்துள்ளார். அவரை ரகசியமாகக் கண்காணித்துவந்த கணவன், உள்ளூரைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் மனைவிக்குத் தவறான தொடர்பு இருப்பதைக் கண்டுபிடித்தார்.

இதையடுத்து தமிழ்செல்வன், தவறான தொடர்பை கைவிட்டுவிடும்படி மனைவியைக் கண்டித்துள்ளார்.அப்போதைக்குக் கணவனுக்கு அடங்கி நடக்கும் மனைவிபோல கேட்டுக்கொண்ட நந்தினி, கணவர் இல்லாத நேரங்களில் தன் ரகசிய காதலனை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (05.12.2021) காலையில் தமிழ்செல்வன், அவசர வேலை காரணமாக வெளியே சென்றிருந்தார். இந்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தது போல நந்தினி, உடனடியாக தன் ரகசிய காதலனை வீட்டுக்கே வரவழைத்து அவருடன் நெருக்கமாக இருந்திருக்கிறார்.

திடீரென்று வீட்டிற்கு வந்த கணவன், மனைவியும், அவருடைய ரகசிய காதலனும் இருந்த கோலத்தைப் பார்த்து ஆத்திரமடைந்தார். இதை எதிர்பாராத அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

ஆத்திரத்தில் இருந்த தமிழ்செல்வன், மனைவியை சரமாரியாகத் தாக்கினார். மேலும், வீட்டில் இருந்த அரிவாளால் மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் நந்தினி நிகழ்விடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

மனைவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதைத் பார்த்த தமிழ்செல்வன், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் காவல் நிலைய காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

சடலம், உடற்கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர், தலைமறைவான தமிழ்செல்வனைதேடிவருகின்றனர்.

Husband and wife namakkal district Police investigation
இதையும் படியுங்கள்
Subscribe