Skip to main content

மனைவியை மிரட்டி விஷம் குடிக்க வைத்து கொலையா?- குழந்தை உயிரையும் பறித்த கொடூரம்!

Published on 27/05/2022 | Edited on 27/05/2022

 

WIFE AND CHILDREN INCIDENT POLICE INCIDENT

 

கொத்தாளமுத்துவைக் காதலித்துக் கைகூடும் வாழ்க்கை, தன் உயிரையும் குழந்தை உயிரையும் பறித்துவிடும் எனக் கனவிலும் நினைத்திருக்கமாட்டாள் காயத்ரி. ஆனால், காயத்ரியும் அவளுடைய 4 மாத ஆண் குழந்தையும் மர்மமான முறையில் வீட்டில் பிணமாகக் கிடந்தனர்.  

என்ன நடந்தது?

கொத்தாளமுத்துவும், காயத்ரியும் சிவகாசி அருகிலுள்ள விஜயகரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் காதலித்தபோதே, கொத்தாளமுத்து வீட்டில் ‘இவன் சரியில்லாதவன்.. திடீர் திடீரென்று ஒருமாதிரி நடந்துகொள்வான்..’ என எச்சரித்துள்ளனர். ஆனாலும், காதல் மீதான நம்பிக்கையில் கொத்தாளமுத்துவைக் கரம் பிடித்தாள், தனியார் பள்ளி ஆசிரியையான காயத்ரிக்கு ஆண் குழந்தை பிறக்க, கோகுல் ரக்சன் எனப் பெயர் வைத்தனர்.  

 

கடந்த ஒன்றரை வருடமாக கொத்தாளமுத்து எந்த வேலைக்கும் போகவில்லை. அதேநேரத்தில், காயத்ரியின் 30 பவுன் நகையை விற்று செலவழித்துவிட்டான். அதனால், வீட்டில் சண்டையும் சச்சரவுமாக இருந்துள்ளது. இந்த நிலையில்தான், கொத்தாளமுத்து தலைமறைவாகிவிட, அந்த வீட்டின் மாடியில் உயிரற்ற சடலங்களாகக் கிடந்தனர், காயத்ரியும் குழந்தை கோகுல் ரக்சனும். 

 

உடலில் ஒரு காயமும் இல்லாத நிலையில், பிரேதப் பரிசோதனை முடிவில், விஷம் குடித்து காயத்ரி உயிரைவிட்டதும்,  குழந்தை கோகுல் ரக்சன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

கொத்தாளமுத்து இன்னும் பிடிபடாத நிலையில், விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு ‘விஷத்தைக் குடித்துச் செத்துவிடு. இல்லையென்றால் தலையணையால் அமுக்கி குழந்தையைக் கொன்றுவிடுவேன்..’ என்று காயத்ரியை கொத்தாளமுத்து மிரட்டியிருக்கக்கூடும். காயத்ரி விஷத்தைக் குடித்ததும், குழந்தையைத் தலையணையால் அமுக்கிக் கொலை செய்திருக்கக்கூடும்.’ எனச் சந்தேகம் எழுந்துள்ளது. 

 

தலைமறைவான கொத்தாளமுத்து போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கி வாக்குமூலம் அளிக்கும்போதுதான், இருவரது மரணத்தில் உள்ள மர்மம் விலகும்.  

 
 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.