Skip to main content

நூற்பாலை ஊழியர் அடித்துக் கொலை; மனைவி, மைத்துனர் கைது

Published on 23/11/2022 | Edited on 23/11/2022

 

Wife  brother-in-law arrested in case beating spinning mill worker

 

சங்ககிரி அருகே, தனியார் நூற்பாலை ஊழியரை அடித்துக் கொன்ற வழக்கில் அவருடைய மனைவி, மைத்துனரை காவல்துறையினர் கைது செய்தனர். 

 

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள தாசநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் தனபால். குமாரபாளையத்தில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சரிதா (38). இவர்களுக்கு 20 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. 20 வயதில் ஒரு மகளும், 17 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.  

 

கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு கணவன், மனைவிக்குள் திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, சரிதா கணவரைப் பிரிந்து சென்று விட்டார். அவர், சங்ககிரி ஆர்.எஸ். பகுதியில் தனியாக துணிக்கடை நடத்தி வருகிறார். இதற்கிடையே தனபால், உள்ளூரைச் சேர்ந்த சில பெரியவர்கள் மூலமாக தன் மனைவியை சமாதானப்படுத்தி தன்னுடன் சேர்த்து வைக்கும்படி கூறி வந்துள்ளார். தனபாலுக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தின் ஆர்.சி. புத்தகம், கல்விச்சான்றிதழ்கள், ஏ.டி.எம். அட்டை ஆகியவற்றை சரிதாவும், அவருடைய அண்ணன் சரவணனும் எடுத்து வைத்துக்கொண்டு தர மறுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்களுக்குள் மோதல் இருந்து வந்தது. 

 

Wife  brother-in-law arrested in case beating spinning mill worker

 

இந்நிலையில், நவ. 21 ஆம் தேதி இரவு தனபால், தனது மைத்துனர் சரவணன் வீட்டுக்குச் சென்று சரிதாவை சமாதானப்படுத்தி தன்னுடன் சேர்த்து வைக்கும்படியும், தன்னுடைய வாகனத்தின் ஆர்.சி. புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்து விடும்படியும் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த சரவணன், சரிதா ஆகியோர் தனபாலை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். சரவணன் கீழே கிடந்த கல்லை எடுத்து தாக்கியுள்ளார். அக்கம்பக்கத்தினர் சண்டையை விலக்கி விட்டுள்ளனர்.  

 

இந்த தாக்குதலில் தனபால் மயக்கம் அடைந்து கீழே சரிந்து விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சங்ககிரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பரிசோதனையில், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியிலேயே இறந்து விட்டது தெரிய வந்தது.  

 

இதையடுத்து தனபாலின் தந்தை சின்னப்பன் (70), தனது மகனை கல்லால் அடித்துக் கொலை செய்துவிட்டதாக சரவணன், சரிதா மீது சங்ககிரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.  அதன்பேரில் காவல் ஆய்வாளர் தேவி, எஸ்.ஐ. சுதாகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, தனபாலின் மனைவி சரிதா, மைத்துனர் சரவணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைதான இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் சரிதாவை, சேலம் பெண்கள் கிளைச்சிறையிலும், சரவணனை சேலம் மத்திய சிறையிலும் அடைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

பார் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் மீது வழக்கு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Bar roof collapses, 3 lost live Case against 12 people

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமாக இயங்கி வந்த பாரின் முதல் தளத்தின் மேற்கூரை நேற்று இரவு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக் கொண்டுள்ளதாகத் தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அபிராமபுரம் போலீசார், பாரின் மேலாளர் சதீஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.