வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பொழிந்து வருகிறது.
நேற்று இரவில் பெய்த கனமழையால் கரூரின் அரவக்குறிச்சி, தான்தோன்றிமலை, ராயனூர் உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ச்சி நிலவியது. அதேபோல் திருவண்ணாமலையில் செங்கம், போளூர், வேட்டவலம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பொழிந்தது. திருச்சியில் ஸ்ரீரங்கம், உறையூர், பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழையானது நீடித்தது. அதேபோல் மதுரையில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது.
மதுரையின் பழங்காநத்தம், திருப்பரங்குன்றம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் கனமழை நீடித்தது. இதேபோல் விருதுநகர் மாவட்டத்திலும் பரவலாக மழை பொழிந்தது. அல்லம்பட்டி, அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி பகுதிகளில் பரவலாக மழை பொழிந்தது. தஞ்சையைச் சுற்றியுள்ள கரந்தை, பள்ளி, அக்ரஹாரம், மாரியம்மன் கோவில், விளார் ஆகிய இடங்களில் மழை கொட்டியது. அரியலூர் மாவட்டத்தின் ஜெயங்கொண்டம், செந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் மழை பொழிந்தது. அதேபோல, சேலம், ஆத்தூர், தேனி எனப் பல மாவட்டங்களில் பரவலாக மழை பொழிந்தது.