தி.நகரில் அதிக பாதிப்பு ஏற்பட்டது ஏன்?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

Why was there so much damage in the city? - Chief Minister MK Stalin's explanation!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10/11/2021) சென்னை, தியாகராய நகரில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

தி.நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டீர்களே ஸ்மார்ட் சிட்டி திட்டம் எப்படி இருக்கிறது?

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் லஞ்சம் வாங்கி, ஊழல் செய்து, கமிஷன் பெற்று அரைகுறையாக பணிகளை செய்திருக்கிறார்கள். அதனால்தான் தி.நகரில் இவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்கிறது.

விஜயராகவா ரோட்டில் நிவாரணப் பணிகளை பார்த்தீர்களே, எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது?

மோட்டாரைப் பயன்படுத்தி தண்ணீரை வெளியேற்றிக் கொண்டிருக்கிறோம். அதுதான் தற்போதைய சூழ்நிலை.

மத்திய அரசிடம் நிவாரணம் எதுவும் கேட்டுள்ளீர்களா?

இன்னும் இரண்டு நாட்கள் மழை இருக்கிறது என்கிறார்களே, அதையும் பார்த்துவிட்டுத்தானே நிவாரணம் கோர முடியும்.

மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால், எந்த நோக்கத்தோடு, எந்த கொள்கையோடு, எந்த இலட்சியத்தோடு, ஆட்சிக்கு வந்தோமோ அதை நிச்சயமாக, அதே அடிப்படையில் பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய பகுதிகளில் முதலில் முக்கியத்துவம் கொடுத்து, நாங்கள் நிவாரண நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம், தொடர்ந்து பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

கொட்டும் மழையில் ஆய்வு செய்கிறீர்கள், எப்படி?

இது எனக்கு புதிதல்ல. நான் மேயராக இருந்தபோது செய்திருக்கிறேன், சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும் செய்திருக்கிறேன், துணை முதலமைச்சராக இருந்த போதும் செய்திருக்கிறேன். இப்போது முதலமைச்சராக இருந்து செய்கிறேன். இந்த பிரச்சனை எல்லாம் கடந்த10 வருடஆட்சியில் எதுவுமே செய்யாத காரணத்தால்தான், நாங்கள் ஆறு மாதமாக, எப்போது ஆட்சிக்கு வந்தோமோ, அதிலிருந்து மழை பெய்து கொண்டிருக்கிறது,எங்கெங்கெல்லாம் அடைப்பு வரும் என்று எங்களுக்குத் தெரியும், அதையெல்லாம் சரி செய்து கொண்டிருக்கிறோம். 50 சதவீதம், 60 சதவீதம் நாங்கள் செய்திருக்கிறோம், இன்னும் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த மழைக்காலம் முடிந்தவுடன் அதையும் செய்து நிரந்தரமாக, சேதாரம் இல்லாதசென்னையாக மாற்றுவோம்.

நோய் பரவாமல் இருப்பதற்கு....

ஆங்காங்கு முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்குக் கூட மருத்துவ முகாம்கள் அமைத்து, மருத்துவர்களை நியமித்து அந்த பணியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Chennai chief minister heavy rains Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe