Skip to main content

மெரினா கடற்கரையை பராமரிக்க ஏன் ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் குழு அமைக்கக் கூடாது... தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி..! 

Published on 15/07/2021 | Edited on 15/07/2021

 

Why IAS maintains Marina Beach? Officer-led committee should not be formed .. High Court question to the Government of Tamil Nadu ..!


மெரினா கடற்கரையை சுத்தமாகப் பராமரிப்பதற்கு ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான குழுவை ஏன் அமைக்கக் கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

 

சென்னை மெரினா கடற்கரையில் ஐஸ்கிரீம் வியாபாரிகளுக்கும் கடைகள் ஒதுக்கக் கோரிய வேலுமணி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகள் நீதிபதிகள் என். கிருபாகரன், டி.வி. தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது உலகின் பெரிய கடற்கரையான மெரினாவை முறையாக பராமரிப்பதில்லை என்றும், அதைப் பற்றி யாரும் கவலை கொள்வதில்லை என்றும் தெரிவித்தனர். அதற்கு சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முறையாகப் பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்தார். பின்னர் இந்த வழக்கில் சென்னை மாநகராட்சியின் மண்டல அதிகாரியையும், சென்னை மாநகரக் காவல் ஆணையரையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்து, சில கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

 

அதன்படி மெரினா கடற்கரையில் குப்பை போடுபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறதா? தினமும் எவ்வளவு குப்பைகள், எவ்வாறு குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன? மெரினா கடற்கரையில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் கடற்கரையில் கழிவறைகள் மற்றும் நடமாடும் கழிவறைகள் எத்தனை அமைக்கப்பட்டுள்ளன என கேள்வி எழுப்பினர். 

 

மேலும், கடற்கரை பராமரிப்பிற்காக எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது? கடை உரிமையாளர்களிடமிருந்து எவ்வளவு வாடகை வசூலிக்கப்படுகிறது? குற்றங்கள் நடக்காத வகையில் இரவு 10 மணிக்குப் பிறகும் காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதா? மெரினா லூப் சாலை அருகிலேயே மீனவர்களுக்கான மீன் அங்காடியை ஏன் அமைக்கக் கூடாது எனவும் கேள்விகளை முன்வைத்துள்ளனர். மெரினாவின் அழகைப் பாதுகாக்க மாநகராட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன எனவும் விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளனர். 

 

மெரினா கடற்கரையை சுத்தமாகப் பராமரிப்பதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில், சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு பொதுப்பணித் துறை, காவல்துறை, சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்கள், வியாபாரிகளின் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதி ஆகியோர் அடங்கிய குழுவை தமிழ்நாடு அரசு ஏன் அமைக்கக் கூடாது என விளக்கமளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 22ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

31 வது முறையாக நீட்டிப்பு; நீதிமன்றம் அதிரடி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Extension for the 31st time; Court action

போக்குவரத்துத்துறையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்  இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மேலும் 15 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை 31 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.