ADVERTISEMENT

கரோனா நிதி பயன்பாட்டினை இணையதளத்தில் ஏன் பதிவேற்றவில்லை? -தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

07:12 PM May 27, 2020 | kalaimohan

ADVERTISEMENT

மற்ற மாநிலங்களைப்போல், கரோனா நிவாரண நிதிக்கு வந்துள்ள மொத்த நிதி எவ்வளவு? பயனடைந்தவர்கள் எண்ணிக்கை எவ்வளவு? இதுகுறித்து ஏன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக்கூடாது? என்பது குறித்து பதிலளிக்குமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT


வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி செய்ய, நிவாரண நிதியத்தை உருவாக்க மத்திய - மாநில அரசுகளுக்கு அரசியல் சாசனம் அதிகாரம் வழங்கியுள்ளது.

இந்நிலையில், கரோனா பரவலை தடுக்கவும், ஊரடங்கினால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்கு ஏதுவாக, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க, தொழிலதிபர்கள் மற்றும் தனிநபர்களுக்கு முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். அதன் அடிப்படையில், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, தங்களது பங்களிப்பை மக்கள் வழங்கி வருகின்றனர்.


ஆனால், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான இணையதளத்தில், நன்கொடையாக வந்துள்ள தொகை எவ்வளவு? பயனாளிகள் எண்ணிக்கை எவ்வளவு? என்பன உள்ளிட்ட விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனக்கூறி, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், முதல்வர் பொது நிவாரண நிதி இணையதளத்தில் மார்ச் மாதம் முதல் 38 ஆயிரத்து 849 பரிவர்த்தனைகள் மூலம் 20.47 கோடி ரூபாய் பங்களிப்பு பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பத்திரிகைகளில் 306 கோடியே 42 லட்சம் ரூபாய் நன்கொடை வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதல்வர் பொது நிவாரண நிதி இணையதளத்தில், நிதி வழங்கியவர்கள் யார் யார்? பயனாளிகள் யார் யார்? என்பன உள்ளிட்ட எந்த விபரங்களும் குறிப்பிடப்படவில்லை. வெளிப்படைத் தன்மையைப் பேணும் வகையில், முதல்வரின் பொது நிவாரண நிதி இணையதளத்தில், பொதுமக்கள் அறிந்து கொள்ள, இந்த விவரங்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு, மனுவுக்கு ஜூன் 4-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT