Skip to main content

பேருந்து நிலைய விரிவாக்கம் தாமதம் ஏன்? சார் ஆட்சியரிடம் மனு அளித்த பொதுமக்கள்! 

Published on 25/09/2021 | Edited on 25/09/2021

 

Why is the bus station expansion delayed? The public who petitioned the Collector

 

கடலூர் மாவட்டம், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சேலம், கடலூர் செல்கின்ற சாலையில் நான்குமுனை சந்திப்பில் அமைந்துள்ள வேப்பூரில் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருக்கும். இந்த ஊர், தாலுகாவின் தலைநகரமாகவும் உள்ளது. அதனால் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து செல்கிறார்கள். மேலும், தொலைதூர பேருந்துகள், கிராமங்களுக்குச் செல்லும் பேருந்துகள் அதிக அளவில் வந்து செல்கின்றன. ஏற்கனவே இந்த ஊரில் சிறிய அளவில் பேருந்து நிலையம் இருந்தது. அதை விரிவாக்கம் செய்வதற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.

 

அதன் அடிப்படையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி துவங்கப்பட்டு நடைபெற்றுவந்தது. திடீரென கடந்த சில மாதங்களாக அந்தப் பணி நிறுத்தப்பட்டது. இதற்குக் காரணம், பேருந்து நிலைய கட்டுமானப் பணியினை தனிநபர் ஒருவர் தடுத்து நிறுத்திவந்துள்ளதாகவும் இதனால் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்தக் கிராம மக்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக நேற்று (24.09.2021) வேப்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வரி திருஞானம் தலைமையில் பொதுமக்கள் திரளாகச் சென்று விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதைத் தொடர்ந்து சார் ஆட்சியர் அமித் குமாரை சந்தித்தனர். அப்போது, வேப்பூர் ஊராட்சியில் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் அரைகுறையாய் நிற்கிறது.

 

அதை விரைந்து முடிக்க வேண்டும். அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்த தனிநபர் ஒருவர் பேருந்து நிலைய கட்டுமான பணி தடைப்படுவதற்கு காரணமாக உள்ளார். எனவே, இதுகுறித்து வேப்பூர் காவல் நிலையம், வேப்பூர் தாசில்தார் அலுவலகங்களில் ஏற்கனவே புகார் அளித்துள்ளோம். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சார் ஆட்சியர் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய பேருந்து நிலைய பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என்று சார் ஆட்சியரிடம் விரிவாக எடுத்துக் கூறியதோடு புகார் மனுவையும் அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட சார் ஆட்சியர் அமித் குமார், உரிய நடவடிக்கை எடுப்பதாக வேப்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் பொதுமக்களிடம் உறுதியளித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.