Skip to main content

வீட்டு வாசலில் மது குடிப்பதை தட்டிக் கேட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிப் படுகொலை; 4 மாவட்ட போலீசார் குவிப்பு

Published on 04/09/2023 | Edited on 04/09/2023

 

 'Why are you drinking at the door'; 4 members of the same family were hacked ; Police build up

 

திருப்பூரில், 'வீட்டு வாசலில் ஏன் மது குடிக்கிறீர்கள்' எனத் தட்டிக் கேட்ட தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 மாவட்ட போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் செந்தில்குமார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த மோகன், புஷ்பவதி, ரத்தனாம்பாள் ஆகிய நான்கு பேரும் நேற்று இரவு வீட்டின் வாசலின் அருகே மது அருந்த வந்த வெங்கடேசன் என்பவரிடம் இங்கு மது அருந்தக் கூடாது எனத் தெரிவித்துள்ளனர். வெங்கடேசன் உடன் மது அருந்த வந்து இரண்டு பேரிடமும் இந்த பகுதியில் மது அருந்தக்கூடாது எனத் தெரிவித்தனர். இதனால் நடந்த வாக்குவாதத்தில் வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்கள், செந்தில்குமார் உள்ளிட்ட தட்டிக் கேட்ட நான்கு பேரையும் வெட்டிப் படுகொலை செய்தனர்.

 

இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நான்கு பேரின் உடல்களும் பல்லடம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக நேற்று இரவு கொண்டுவரப்பட்டது. பல்லடம் அரசு மருத்துவமனையில் உள்ள குளிரூட்டும் பெட்டி பழுதடைந்துள்ளதால் உடனடியாக நான்கு பேர் உடலுக்கும் பிரேதப் பரிசோதனை செய்ய முடியவில்லை. இன்று காலை தான் பிரேதப் பரிசோதனை நடைபெற உள்ளது. இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க கோவை, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட போலீசார் பல்லடம் அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் சாலை பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

கொலை செய்த மூன்று நபர்களையும் கைது செய்தால் மட்டுமே உடல்களை வாங்குவோம் என நேற்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் தற்போது பிரேதப் பரிசோதனை நடைபெறும் மருத்துவமனையின் முன் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

 

சார்ந்த செய்திகள்