Skip to main content

வெங்காயத்திற்கு காசு கொடுக்காத நபர்... ஸ்கார்பியோவில் வந்து கடத்த முயன்ற வியாபாரி...

Published on 17/05/2021 | Edited on 17/05/2021
Wholesaler who tried to kidnap the buyer for the onion bag ..!
                                                                 மாதிரி படம்

 

மனிதர்கள் சாதாரணமாகப் பேசும் போது சிலர், "அட போய்யா பெரிய வெங்காயம் மாதிரி பெருசா பேச வந்துட்ட" என்று சொல்லுவார்கள். அதே போல் இப்படி வெங்காயத்தை உதாரணம் காட்டி அலட்சியமாக வார்த்தையை வீசுவார் மறைந்த தந்தை பெரியார். 

 

இப்படிப்பட்ட இந்த வெங்காயத்தின் வியாபாரத்தில் கொடுக்க வேண்டிய பாக்கி பணத்திற்காக ஆள் கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகில் உள்ளது விஸ்வரெட்டிபாளையம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவரது மகன் 42 வயது நிரம்பிய சிவகுமார். இவர் அப்பகுதியில் ஒரு வெங்காய வியாபாரி, மொத்தமாக வெங்காயத்தை வாங்கி சிறு வியாபாரிகளுக்கு விற்று வந்துள்ளார். இவர் புதுச்சேரி மாநிலம் கதிர்காமத்தை  சேர்ந்த சண்முகம் என்ற மொத்த வெங்காய வியாபாரியிடம் அவ்வப்போது வெங்காயம் கொள்முதல் செய்து வந்துள்ளார். 

 

அதன்பேரில், சண்முகத்திற்கு சிவகுமார் ஒன்றரை லட்சம் பணம் பாக்கி தர வேண்டி இருந்துள்ளது. இதைப் பலமுறை சண்முகம் கேட்டும், சிவக்குமார் கொடுக்கவில்லை. இந்தநிலையில், நேற்று காலை 11மணி அளவில் சிவகுமார் தனது பைக்கில் விக்கிரவாண்டியில் இருந்து எம்.குச்சிப்பாளையம் கிராமத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, கோணப்பாலம் என்ற இடத்தில் ஏற்கனவே ஸ்கார்பியோ காரில் காத்திருந்த 5 பேர் கொண்ட கும்பல் சிவகுமாரை மடக்கித் தரவேண்டிய கடன்பாக்கி தொகைக்காக அவரை பலவந்தமாகக் கடத்த முயன்றுள்ளனர்.

 

அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக முரண்டு பிடித்துப் போராடிய போது அந்த பாலத்திலிருந்து கீழே தவறி விழுந்துள்ளார் சிவக்குமார். இதில் அவரது வலது கால் முறிந்தது. இதனைக் கண்டதும், அவரை கடத்த வந்த கும்பல் அங்கிருந்து தப்பி காரில் சென்று விட்டனர். படுகாயமடைந்த சிவகுமாரை அந்த வழியாகச் சென்றவர்கள் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த விக்கிரவாண்டி சப்-இன்ஸ்பெக்டர் பரணி நாதன், சக போலீஸாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை செய்ததோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவகுமாரிடமும் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர். இதையடுத்து எஸ்.பி.ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சிவகுமாரை கடத்த முயன்ற கும்பலைக் கைது செய்வதற்காகத் தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளார். அவர்கள் சிவகுமாரை கடத்த முயன்றவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
PMK Ramdas campaign supporting the candidate

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இத்தகைய சூழலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.

இதற்கிடையே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பட்டாளி மக்கள் கட்சிக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி அரக்கோணம் - பாலு, கடலூர் - தங்கர்பச்சான், திண்டுக்கல் - திலகபாமா, தர்மபுரி - செளமியா அன்புமணி, விழுப்புரம் - முரளி சங்கர், ஆரணி - கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், சேலம் - அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - தேவதாஸ்  காஞ்சிபுரம் - ஜோதி வெங்கடேஷ் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து கோவடி கிராமத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு நல்ல வேட்பாளரான முரளி சங்கர் நிறைய படித்துள்ளார். 6 மொழிகளில் சரளமாக பேசுவார். மக்களை பற்றி சிந்திக்க கூடியவர். மக்களுக்காக பாடுபடக்கூடியவர். சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார்” எனத் தெரிவித்தார். 

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.