Who will be appointed as temple priests .. Government of Tamil Nadu information in the High Court ...!

முறையாகப் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே கோயில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 38 கோயில்களில் அச்சகர்கள் நியமனம் தொடர்பாக ஜூலை 6ம் தேதி விண்ணப்பங்கள் வரவேற்று அறநிலையத்துறை விளம்பரம் வெளியிட்டது. அதில், அர்ச்சகர்களுக்கான சான்றிதழ் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்த அறிவிப்பை ரத்து செய்து, ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்க உத்தரவிடக் கோரி, அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க பொதுச்செயலாளர் பி.எஸ்.ஆர் முத்துக்குமார் சார்பாக வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், ஆகம விதிகளைப் பின்பற்றி தான் அர்ச்சகர்கள் நியமிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஆகமவிதிப்படி முறையான பயிற்சி பெறாதவர்களை நியமிப்பது தவறானது எனவும்; மேலும், 38 கோயில்களில் அர்ச்சகர்கள் நியமன அறிவிப்பானையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், அர்ச்சகர் பணிக்கான விண்ணப்பங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது எனவும், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி அனிதா சுமந்த முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கை அந்த அமர்விற்கு மாற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.

அப்போது நீதிபதி, இது போன்ற அர்ச்சகர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகின்றார்கள், முறையாகப் பயிற்சி அளிக்கப்படுகிறதா எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அரசு தலைமை வழக்கறிஞர், முறையாகப் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

இதனையடுத்து வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற பதிவுத்துறைக்கு நீதிபதி அனித்த சுமந்த் உத்தரவிட்டார்.