Skip to main content

சேலம் மேயர் ரேஸில் முந்துவது யார்? தி.மு.க.வில் நீடிக்கும் சஸ்பென்ஸ்! 

Published on 27/02/2022 | Edited on 27/02/2022

 

 

Who is leading the Salem Mayor Race? Long lasting suspense in DMK!



சேலம் மாநகராட்சி மேயர் பதவி யாருக்கு என்பதில் தி.மு.க.வில் தொடர்ந்து சஸ்பென்ஸ் நீடிப்பது, கட்சிக்குள்ளும், மக்கள் மத்தியிலும் நாளுக்குநாள் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. 

 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தி.மு.க. நேரடியாக 48 இடங்களிலும், காங்கிரஸ், இடதுசாரிகள், வி.சி.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் 12 இடங்களிலும் போட்டியிட்டன. தி.மு.க. கூட்டணி 50 இடங்களை வென்று, பத்தாண்டுகளுக்குப் பிறகு மேயர் பதவியைக் கைப்பற்றி உள்ளது. 

 

மேயர் பதவியைக் கைப்பற்றுவதில் தி.மு.க.வில் இந்தமுறை கடும் போட்டி நிலவுகிறது. மேயருக்கான யூகப்பட்டியலில் உள்ள ஒவ்வொருவரும், பதவிக்காக கட்சி மேலிடத்தை ஒவ்வொரு வழிகளில் வட்டமடித்து வருகின்றனர். 

 

சேலம் மாநகர தி.மு.க. அமைப்பாளரும், 28- வது வார்டு கவுன்சிலருமான ஜெயக்குமார் (வயது 50), மேயர் பதவிக்கான ரேஸில் முதலிடத்தில் இருப்பதாக பலமான பேச்சு அடிபடுகிறது. துளுவ வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். 

 

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரான ராஜேந்திரன் எம்.எல்.ஏ.வின் நம்பிக்கைக்குரிய வட்டத்தில் இருப்பவர். பி.காம்., பட்டதாரியான ஜெயக்குமார், லாரி புக்கிங் தொழில் செய்து வருகிறார். இவருடைய தந்தை ஜெயராமன், தொடக்க காலத்தில் செவ்வாய்பேட்டை பகுதியில் கட்சியை வளர்த்ததில் முக்கிய பங்காற்றியவர். 

 

ஜெயக்குமார் மாநகர பொறுப்புக்கு வந்த பிறகு, வர்த்தகர்கள் நிரம்பிய செவ்வாய்பேட்டையில் கடந்த காலத்தில் தி.மு.க.வுக்கு ஏற்பட்டிருந்த அவப்பெயரை மெல்ல மெல்ல நீங்கச்செய்தார். அதனாலும் மாவட்டச் செயலாளரின் குட்புக்கில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். உளவுப்பிரிவும், ஐபேக் டீமும் இவரைப் பற்றி நல்ல விதமாகவே கட்சித் தலைமைக்கு ரிப்போர்ட் அடித்திருக்கிறது.

 

இதையடுத்து, 18- வது வார்டு கவுன்சிலர் சர்க்கரை ஆ.சரவணன் (வயது 53) பெயரையும் மேயர் பதவிக்கு பலமாக உச்சரிக்கிறார்கள். ஏற்கனவே கவுன்சிலர், மண்டலக்குழுத் தலைவராக இருந்த அனுபவம் உள்ளவர். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். கட்சி காலால் இட்ட உத்தரவை தலையால் செய்து முடிக்கக் கூடியவர் என மாவட்டச் செயலாளரிடம் பெயரெடுத்திருக்கிறார். கட்டட காண்டிராக்டர். கிளீன் இமேஜ்க்கு சொந்தக்காரர் என்பது இவருடைய பிளஸ் பாயிண்ட். 

 

அதேபோல, உள்ளாட்சி அமைப்புகளில் பழுத்த அனுபவம் வாய்ந்தவரான 26- வது வார்டு கவுன்சிலர் எஸ்.டி.கலையமுதன் (வயது 79) பெயரும் மேயர் ரேஸில் அடிபடுகிறது. தெலுங்கு செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர். சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. அவைத்தலைவரான இவரும் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரனின் குட்புக்கில் இருந்தாலும் கூட, வயது மூப்பு ஒரு தடையாக கவனிக்கப்படுகிறது. ஆனாலும் மேயர் பதவிக்கான ரேஸில்தான் கலையமுதனும் இருக்கிறார் என்கிறார்கள். 

 

இவர்கள் தவிர, 52- வது வார்டு கவுன்சிலர் 'அசோக் டெக்ஸ்' அசோகன், 56- வது வார்டு கவுன்சிலர் சரவணன், 15- வது வார்டு கவுன்சிலர் உமாராணி ஆகியோரும் மேயர் பதவியைக் கைப்பற்றும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். 

 

Who is leading the Salem Mayor Race? Long lasting suspense in DMK!

 

இது தொடர்பாக தி.மு.க. மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ''கவுன்சிலர் உமாராணிக்கு, முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் உடன் நல்ல நட்பு உள்ளது. அவருடைய மருமகன், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற மாநில பொறுப்பிலும் இருக்கிறார். இந்த நெருக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு உமாராணி, மேயர் பதவியை கைப்பற்றிவிடுவார் என்று தேர்தலுக்கு முன்பிருந்தே ஒரு பேச்சு பலமாக அடிபடுகிறது. 

 

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் சென்னை உள்பட 11 மாநகராட்சிகளில் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. அவ்வாறு இருக்கையில், சேலம் மாநகராட்சி மேயராகவும் ஒரு பெண்ணை அமர்த்துவதில் கட்சி ஆர்வம் காட்டாது. நிச்சயமாக இங்கு ஆண்தான் மேயர். அதனால் மேயர் ரேஸில் உமாராணி இல்லை என்று சொல்ல முடியும். அதேநேரம் அவர் துணை மேயர் அல்லது மண்டலக்குழுத் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. 

 

அமைச்சர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மாவட்டச் செயலாளர் ராஜேந்திரனுக்கு அந்த வாய்ப்பு கிட்டவில்லை. அப்படி இருக்கும்போது, அமைச்சர் அந்தஸ்தில் உள்ள மேயர் பதவியை, அவர் தனக்குக் கட்டுப்பட்ட ஒருவருக்கு வழங்கவே கட்சி மேலிடத்திற்கு பரிந்துரை செய்வார். 

 

ஒருவேளை, சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என். நேருவின் தலையீட்டால் ராஜேந்திரனுக்கு எதிர் முகாமில் உள்ள ஒருவருக்கு மேயர் பதவி கிடைக்கும் பட்சத்தில், அது மேயர் - மாவட்டச் செயலாளர் என இருதுருவ அரசியலாக மாறிவிடும். கட்சியின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியமாக இருக்காது. அதனால் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் பரிந்துரை செய்யும் பட்டியலில் இருந்துதான் மேயர் பதவிக்கான பெயர்களை தளபதியும் 'டிக்' செய்வார்,'' என்கிறார்கள் தி.மு.க.வினர். 

 

மாநகர அமைப்பாளர் ஜெயக்குமார் அல்லது சர்க்கரை ஆ.சரவணன் ஆகிய இருவரில் ஒருவருக்கு மேயர் ஆவதற்கான கூடுதல் வாய்ப்பு இருக்கிறது. எதுவாயினும் முதல்வர் கையில்தான் இறுதி முடிவு.

 

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மார்ச் 2- ஆம் தேதி பதவி ஏற்கின்றனர். அன்றைய தினமே மேயர் பதவிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4- ஆம் தேதி நடக்கிறது. அதுவரை, புதிய மேயர் யார்? என்ற சஸ்பென்ஸ் தொடரும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.