
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 24ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டவர்கள் குறித்து கமல் புகழாரம் சூட்டி பேசினார்.
அந்த வகையில் கன்னட முன்னணி நடிகர் சிவ ராஜ்குமார் குறித்து மேடையில் பேசிய கமல், “கன்னடத்தில் இருந்து இங்கு வந்த சிவ ராஜ்குமார், என் மகனாகவும் ரசிகனாகவும் உங்கள் பிரதிநிதியாகவும் வந்திருக்கிறார்” என்றார். பின்பு அவரது தந்தை ராஜ்குமார் குறித்து தனது அனுபவங்களை குறிப்பிட்டு, சிவ ராஜ்குமாரை பார்த்து, “இவர் அந்த ஊரில் இருக்கும் என் குடும்பம். அதனால் தான் என் பேச்சை ஆரம்பிக்கும் போது, உயிரே, உறவே, தமிழே என ஆரம்பித்தேன். தமிழில் இருந்து பிறந்தது தான் உங்கள் பாஷையும். அதனால் நீங்களும் அதில் உட்படுவீர்கள்” என்றார்.
கமலின் இந்த பேச்சுக்கு, கர்நாடகாவில் தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கன்னட மொழியை அவமதித்து விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பா.ஜ.க. கர்நாடக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா தனது எக்ஸ் பக்கத்தில், “தாய்மொழியை நேசிக்க வேண்டும், ஆனால் அதன் பெயரில் அவமரியாதை செய்வது பண்பாடற்ற செயல். குறிப்பாக கலைஞர்கள் ஒவ்வொரு மொழியையும் மதிக்கும் பண்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் நடித்த கமல்ஹாசன் தனது தமிழ் மொழியைப் போற்றும் போது, சிவ ராஜ்குமார் உட்பட கன்னட மொழியை அவமதித்துள்ளார். இது ஆணவத்தின் உச்சம்' என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவனிடம் கமலின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''வரலாற்று மொழியியல் வல்லுநர்கள், தேவநேயப் பாவாணர் போன்றவர்கள் தமிழ்தான் திராவிட மொழிகளின் தாய் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். பல மொழியில் அறிஞர்கள் அதை பல்வேறு தளங்களில் பதிவு செய்தனர். இன்றைக்கு கன்னடம், மலையாளம் பேசக்கூடிய மக்கள் இந்த உண்மையை ஏற்க தயங்கலாம். ஆனால் வரலாறுதான் வரலாறுதான். உண்மை உண்மைதான். அதை எவரும் மறுக்க முடியாது. கால்டுவெல் அவர்களின் திராவிட மொழிகள் ஒப்பிலக்கணத்திலும் அந்த உண்மை சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே தமிழில் இருந்து பிற மொழிகள் சமஸ்கிருத கலப்பால் உருவாகி இருக்கின்றன என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்ட ஒரு வரலாற்று உண்மை'' என்றார்.