
மதுரை உத்தங்குடியில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று (01.06.2025) தொடங்கியுள்ளது. பொதுக்குழு மேடைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடையில் உள்ள அண்ணா, கலைஞர், அன்பழகன் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங், பெரியார் சிந்தனையாளர் ஆனைமுத்து, போப், சீதாராம் யெச்சூரி, சங்கரய்யா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பலரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
இந்நிலையில் மதுரைக்கு திமுக கொடுத்த வாக்குறுதிகள் எங்கே? என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து எக்ஸ் வலைத்தளத்தில் அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 'பந்தல்குடி கால்வாயை திரைச்சீலை போட்டு மறைக்க முயன்றதை போன்று தான், வெற்று விளம்பரங்களால் 4 ஆண்டுகால அலங்கோல ஆட்சியின் அவலங்களை மறைக்க முயல்கிறது ஸ்டாலின் மாடல் திமுக அரசு. சங்கம் வளர்த்து தமிழுக்கு பெயர் தந்த மதுரையை, தமிழ்நாட்டின் இரண்டாவது மாநகராட்சியை, கல்லும் மண்ணுமான தரமற்ற சாலைகள், முறையற்ற சாக்கடை வடிகால் என அடிப்படை வசதிகள் கூட இல்லாத குப்பை மாநகராட்சியாக மாற்றி, கற்காலத்திற்கே கொண்டு சென்றதே ஸ்டாலின் அரசின் சாதனை!

நீங்கள் வாக்குறுதி அளித்த வேளாண் பல்கலைக்கழகம் எங்கே? போட்டித் தேர்வுகள் மையம் எங்கே? தொழில் வழித் தடம் எங்கே? வர்த்தக மையம் எங்கே? மதுரை மெட்ரோ எங்கே? மதுரைக்கு சொன்ன எதேனும் ஒரு வாக்குறுதியை நிறைவேற்றினீர்களா ? உங்கள் அப்பா பெயர் விளம்பரத்துக்காக ஒரு நூலகம் அமைத்ததை மட்டும் வைத்துக்கொண்டு, இது தான் சாதனை எனில், மதுரை மக்களுக்கு இதை விட பெரும் சோதனை என்ன இருக்கப் போகிறது?
பந்தல்குடி கால்வாயை திரை போட்டு மறைத்ததே வெட்கக்கேடான செயல். அதை விட, Damage Control என்ற பெயரில் பொம்மை முதல்வர் கையை காட்டிக்கொண்டு போஸ் கொடுத்த போட்டோ ஷூட் வேடிக்கையின் உச்சம். போட்டோ ஷூட் தவிர வேறு எதுவுமே உங்களுக்கு தெரியாதா? இத்தனை கேள்விகளுக்கு இடையே, பொதுக்குழு நடத்துகிறேன் என மதுரைக்கு வர பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூச்சப் பட்டிருக்க வேண்டும். ஆனால் அவரா? போட்டோ ஷூட் என்றால் புல் மேக் அப் உடன் வந்திடுவார்' என விமர்சிக்கப்பட்டுள்ளது.