Skip to main content

“ஆசிரியை வீடியோ எங்கே?” -அனலடிக்கும் விருதுநகர் வில்லங்கம்!

Published on 11/10/2019 | Edited on 11/10/2019

‘மது விருந்தில் பெண்களோடு பெரும் தலைகள்! விருதுநகரைக் கலக்கும் வீடியோ!’ என்னும் தலைப்பில் கடந்த அக்டோபர் 02-04 நக்கீரன் இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதனை அப்படியே நகல் எடுத்த  விருதுநகரைச் சேர்ந்த அசோகன் என்பவர் அதன் ஓரத்தில்  ‘இவனுங்கதான் ஊரில் பெண்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் நிர்வாகிகள். ஊர் உருப்படுமா?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்த நகல்கள் விருதுநகரில் பரவலாக வினியோகிக்கப்பட்டன. அதனால்,  மது விருந்தில் கலந்துகொண்ட பெரும் தலைகள் கொதிநிலைக்குச் சென்றுவிட்டனர்.

 

 "Where is the teacher video?"

 

கடந்த 6-ஆம் தேதி அதிகாலை 3-30 மணிக்கு மணிகண்டன் என்பவரின் வீட்டுக்கதவைத் தட்டினார் விருதுநகர் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சம்பத்குமார். அவரோடு சார்பு ஆய்வாளர், காவலர்கள் என மொத்தம் 6 பேர் சேர்ந்துகொண்டனர்.  “ஒரு வழக்கு சம்பந்தமாக விசாரிக்க வேண்டும்..” என்று கூறி  மணிகண்டனை  ஜீப்பில் ஏற்றினர். அடுத்து, அதே பகுதியில் குடியிருக்கும் நாராயணமூர்த்தியையும் ஆகாஷ் டிவி பிரேம்குமாரையும் அள்ளிக்கொண்டு அந்த ஜீப் அதிகாலை 4-15 மணிக்கு விருதுநகர் கிழக்கு காவல் நிலையம் சென்றது.  

 

 "Where is the teacher video?"

 

“உங்களில் யார் நக்கீரனுக்கு செய்தி கொடுத்தது? மெட்ரிகுலேசன் பள்ளி செயலாளரும் ஆசிரியையும் இணைந்திருக்கும் வீடியோவை அடுத்து வெளியிடப் போகின்றீர்களாமே? அந்த வீடியோ உங்களில் யாரிடம் இருக்கிறது?” என்று இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் மூவரிடமும் விசாரிக்க..  புகார் அளித்ததாகச் சொல்லப்படும் தொழிலதிபர் முரளியும், ராமமூர்த்தியும் அங்கு வந்தார்கள்.  தான்  கொண்டுவந்த பிவிசி பைப்பை ராமமூர்த்தி சம்பத்குமாரிடம் தர, புகார் அளித்தவர்களின் கண்ணெதிரே மூவரையும் அடி பின்னியெடுத்தார்.  அடித்த அடியில் மணிகண்டனின் இடது கை வீங்கித் தொங்கியது. அவர்கள் அடி வாங்கி அலறிய காட்சியைக் கண்டு களித்துவிட்டுக் கிளம்பினார்கள் முரளியும் ராமமூர்த்தியும். அவர்கள் சென்றதும் இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் மணிகண்டனிடம் “நீ போகலாம். உன் மீது வெறும் 75 கேஸ்தான் போட்டிருக்கிறோம்.” எனச் சொல்லி, காலை 6-50 மணிக்கெல்லாம் அனுப்பிவிட்டார். நாராயணமூர்த்தியையும் பிரேம்குமாரையும் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் விட்டுவிட்டார்.

 

 "Where is the teacher video?"

 

இடது கையில் மாவுக்கட்டு போட்டிருந்த மணிகண்டன் நம்மிடம் “முரளியும் ராமமூர்த்தியும் நள்ளிரவில்  விருதுநகர் மாவட்ட எஸ்.பி. ராஜராஜனை வீட்டில்  சந்தித்திருக்கிறார்கள்.  ‘விருதுநகர் கல்வி நிறுவனங்களில் முக்கிய பொறுப்புக்களில் இருந்துகொண்டு தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் நிர்வாகிகள் குறித்த தகவலை நக்கீரன் போன்ற  மீடியாக்களிடம் சொல்கிறார்கள். வாட்ஸ்-ஆப், பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களிலும் பரப்புகிறார்கள். இந்த மூவராலும் எங்கள் மானம் போகிறது. வெளியே தலைகாட்ட முடியவில்லை. அடுத்த வீடியோ ஒன்று ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறதாம். இவர்களை ஏதாவது செய்தே ஆகவேண்டும்.’ என்று இருவரும்  ‘தனிப்பட்ட முறையில்’ கேட்டுக்கொள்ள, நள்ளிரவு கடந்தும் விருதுநகர் கிழக்கு காவல் நிலையம் பரபரப்பானது. இன்ஸ்பெக்டர் தொடங்கி காவலர்கள் வரையிலும் சுறுசுறுப்பானார்கள். ஏனென்றால், எங்களை அடித்துத் துவைக்கும் சேவைக்காக, அந்தப்  பெரும் பணக்காரர் பெரிய தொகை ஒன்றைக் காவல்துறையினரிடம் கொடுத்திருக்கிறார்.

 

 "Where is the teacher video?"


பணத்தைக் கொடுப்பவர் கைகாட்டும் ஆட்களை அடிப்பதும் கொலை செய்வதும் கூலிப்படை செய்யும் வேலைதானே? அதைத்தான் விருதுநகரில் காவல்துறையினர் செய்திருக்கிறார்கள். அதிகாலை 3-30 மணிக்கு வீட்டுக்கு வந்து என்னை இழுத்துச்சென்ற சிசிடிவி ஃபுட்டேஜ் இருக்கிறது. விருதுநகர் கிழக்கு காவல் நிலையம் பதிவு செய்த வழக்கு என்ன தெரியுமா? அன்றைய தினம் காலை 6 மணிக்கு வாடியான் கேட் அருகில் போவோர் வருவோரை ஆபாசமாக நான் திட்டினேனாம். போக்குவரத்துக்கு இடையூறு செய்தேனாம். காவல்துறை என் மீது பொய் வழக்கு போட்டதற்கு வலுவான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அதனை மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கு அனுப்பி புகார் செய்திருக்கிறேன்.” என்று பெருமூச்சுவிட்டவர் “இரவு நேரத்தில் தன் மகன் நாராயணமூர்த்தியை போலீஸ் இழுத்துச்சென்றதைப் பார்த்த அவருடைய அப்பா சுந்தர்ராஜன் அந்த சோகத்தில் அன்றே இறந்துபோனார்.  ஒரு ஆத்திரத்தில்தான் விருதுநகரில்  சேஷாத்ரி என்பவரைக் கொலை செய்தார்கள். அதுபோல்,  என் உயிரைப் பறிக்கவும் இவர்கள் தயங்க மாட்டார்கள்.” என்றார் அச்சத்துடன்.

 

 "Where is the teacher video?"

 

நாம் விருதுநகர் கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் சம்பத்குமாரை தொடர்புகொண்டு, பிவிசி பைப்பால் அடித்தது குறித்தும், பொய் வழக்கு பற்றியும் கேட்டோம். ”அதுவந்து.. அதுவந்து..” என்று பேசுவதற்கு ரொம்பவே தயங்கிய அவர், “பெட்டிஷனை விசாரிச்சோம். யாரையும் அடிக்கல. அவங்க எல்லாரும் ஒரே ஜாதி. வழக்கு வேணாம்னு சொன்னாங்க. அதனால, சாதாரண பிரிவில் செவன்டி ஃபைவ் கேஸ் போட்டு மணிகண்டனை அனுப்பினோம்.” என்றார்.  

 

 "Where is the teacher video?"

 

தொழிலதிபர் முரளி நம்மிடம் “ஒரு மேரேஜ் பார்ட்டியாத்தான் அந்த மது விருந்து நடந்துச்சு. அது ஒரு பழைய வீடியோ. ஆர்கெஸ்ட்ராவுல பெண்கள் பாடினார்கள். அவ்வளவுதான்.  ஆறு மாசத்துக்கு முன்னாலயே இது பெரிய  பிரச்சனை ஆச்சு. போலீஸ் ஸ்டேஷன்ல இதே பிரேம்குமாரும் நாராயணமூர்த்தியும் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தாங்க.  இது ஒருவகையான பிளாக் மெயில். இவங்க வேலையே இதுதான். செக்ரட்டரி - டீச்சர் வீடியோ ரிலீஸ் பண்ணப்போறோம்னு மணிகண்டன் எனக்கு மெசேஜ் அனுப்பினார். இவங்க விவகாரத்தை சட்டபூர்வமா பண்ணனும்னுதான் போலீஸ்கிட்ட போனோம். சென்சிடிவான விஷயம்கிறதால விடியுறதுக்கு முன்னால விசாரிச்சிட்டா நல்லதுன்னு  நெனச்சோம். மற்றபடி போலீசுக்கு யாரும் பணம் கொடுக்கல.
 

nn

 

இவங்க ஏன் மாறி மாறி இதே வேலையா இருக்கிறாங்க தெரியுமா? விருதுநகர் நாடார் சமுதாயத்துக்கென்று முன்னோர்கள் பல இடங்களில் சொத்து வாங்கிப் போட்டிருக்காங்க. கோவில் சொத்து.. ஸ்கூல், காலேஜ்ன்னு நெறய இருக்கு. சுயநலத்தோடு கோடிக்கணக்கான கோவில் சொத்தை சிலர் அவங்க பேர்ல பதிவு பண்ணிட்டாங்க. ஸ்கூல் பொறுப்புல இருந்துக்கிட்டு கோடி கோடியா சுரண்டிட்டாங்க. கோர்ட்ல கேஸ் ஒருபக்கம் நடந்துக்கிட்டிருக்கு. பணத்தைத் திருப்பித் தந்திடறோம்னு மொதல்ல காம்ப்ரமைஸுக்கு வந்தாங்க. அப்புறம், யாரோ தூண்டிவிட்டு மனசு மாறிட்டாங்க. தட்டிக் கேட்கிறவங்கள ஏதாவது பண்ணி அசிங்கப்படுத்தணும்கிறதுதான் இவங்களோட நோக்கம்.  இந்த ஊரு மீதான அக்கறையில் நெறய நல்லது பண்ணுனாரு எங்க அண்ணன் மதிப்பிரகாசம். அவரு இறந்து ரெண்டு வருஷமாச்சு. அப்பவும் இவங்க விடல. இரண்டாமாண்டு நினைவு அஞ்சலிங்கிற பேர்ல, அவரை தாதான்னும் கோர்ட்டையும் போலீஸையும் விலை பேசியவர்ன்னும் நோட்டீஸ் அடிச்சி அசிங்கப்படுத்தினாங்க.  பிசினஸ்ல ரொம்ப பிசியா இருந்தும்,  ஊர் நன்மைக்காக பொது வாழ்க்கைக்கு வர்றோம். எனக்கும் அவங்களுக்கும் சொந்தப் பகை எதுவுமில்ல. முன்னோர்களின் உழைப்பையும் தியாகத்தையும்  மறந்து சுயநலவாதிகள் அபகரித்த  பொதுச்சொத்துக்களை மீட்க வேண்டுமென்ற நல்ல நோக்கத்தோடுதான் நாங்க செயல்படறோம்.” என்று நீண்ட விளக்கம் தந்தார்.  

 

 "Where is the teacher video?"

 

மணிகண்டனோ “கோவில் சொத்தை அபகரித்தவர்களிடமிருந்து மீட்க நினைப்பதெல்லாம் சரிதான். அதற்குத்தான் சட்டமும் நீதிமன்றமும் இருக்கிறதே?  கல்வி நிறுவனங்களில் பொறுப்புக்களில் இருப்பவர்கள் அருவருப்பான செயல்களில் ஈடுபடுவது குற்றமா? அதனை அம்பலப்படுத்துவன் மூலம்,  தரமும் தகுதியும் இல்லாதவர்களை வெளியேற்றி,   அங்கு  பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கச் செய்வது குற்றமா?  அந்தரங்க வீடியோவை யார் வெளியிட்டார்களோ அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? காவல்துறையினரை ஏவி அடித்து மிரட்டி உயிர் பயத்தை ஏற்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?” என்று வலியுடன் கேட்டார்.  

அவரவர்  ‘நியாயம்’ அவரவர்க்கு என்றாலும், யாரும் பொது நீதியிலிருந்து விலகுவதை உலகம் ஏற்றுக்கொள்ளாது! 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்வு இறுதி நாளில் மாணவர்கள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ; காவல்நிலையத்திற்கு குவியும் வலிறுத்தல்கள்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Video released by students on the final day of the exam; Convulsions flock to the police station

பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் நடந்து வரும் சூழலில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிந்த கையோடு பிரியாணியுடன் மது அருந்திய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த நிலையில் சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் காடையாம்பட்டி அருகே 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்த நாள் அன்று பள்ளி மாணவர்கள் சிலர் ஊரில் ஒரு பகுதியில் கூட்டாக அமர்ந்து பிரியாணியுடன் மது அருந்தும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மதுபோதையில் தள்ளாடியபடி படித்த பள்ளிக்கு வந்த மாணவர்கள் பள்ளி முன்பு நின்று குரூப்பாக செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்றன்ர். இதனைக் கண்டு அதிர்ந்த அந்த பகுதி மக்கள் இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் மது அருந்திய மாணவர்களை பிடித்து கண்டித்து எச்சரித்து அனுப்பினர்.

சீருடையில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு மது கிடைத்தது எப்படி என்று விசாரிக்குமாறு ஓமலூர் காவல் நிலையத்திற்கு வலியுறுத்தல்கள் குவிந்து வருகிறது.

Next Story

இளைஞனால் பெரியம்மாவிற்கு நேர்ந்த கொடூரம்; திருவள்ளூரில் பரபரப்பு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 young man who stabbed Periyamma to passed away

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளது கனகவல்லிபுரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரின் மனைவி சரஸ்வதி. இவருக்கு 55 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னேரியில் உள்ள வீட்டில் குமார் மற்றும் சரஸ்வதி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். அவ்வப்போது மகள்கள் பொன்னேரிக்கு சென்று பெற்றோர்களை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குமார் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க, பொன்னேரி கடைத்தெருவிற்கு சென்றுள்ளார். அவரின் மனைவி சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடைக்கு சென்றவர், பொருள்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தபடி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான குமார், சற்று வேகமாக வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்துள்ளார். 

அப்போது அவரது மனைவி சரஸ்வதி, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்ததும் குமார் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது குமாரின் வீட்டுக்குள் சென்று பார்க்கும் போது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அவர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்த சிலர் சரஸ்வதியைத் தூக்கி முதலுதவி செய்ய முற்பட்டுள்ளனர். அப்போதுதான் தெரிந்துள்ளது சரஸ்வதி இறந்துவிட்டார் என்று. இதனைக் கேட்டதும் குமார் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த சிலர் இது குறித்து பொன்னேரி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சரஸ்வதியின் உடல் மற்றும் அவரின் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். அப்போது சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து இந்தக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி மாயமாகி இருந்த காரணத்தால் இந்தக் கொலை, சங்கிலிக்காக நடந்திருக்கலாம்.... என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். இதற்காக, குமார் உட்பட அவரின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து குமாரிடம் விசாரணை செய்த போது, தனக்கு இந்தப் பகுதியில் சொத்து தொடர்பாகவோ அல்லது வேறு விஷயங்கள் தொடர்பாக எதிரிகள் யாருமே இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்து, குமாரின் வீட்டிற்கு யாரேனும் வந்து சென்றார்களா?... என அந்தப் பகுதியில் உள்ள சிலரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சம்பவத்தன்று சரஸ்வதியின் சகோதரி மகனான அசோக்குமார் வந்து சென்றதாக சிலர் கூறியுள்ளனர். உடனே அசோக்குமாரை பிடித்து விசாரித்துள்ளனர். முதலில் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய அசோக்குமார், பின்னர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியிருக்கிறார். இதனால், மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டதால் தனது பெரியம்மாவான சரஸ்வதிடம் சென்று கேட்டதாகவும், அவர் அப்போது பணம் கொடுக்க மறுத்த காரணத்தால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. வாக்கு வாதத்தின் போது திடீரென ஆத்திரமடைந்த அசோக்குமார், வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு சரஸ்வதியை சரமாரியாக குத்தியதும், பின்னர் அவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.