
மதுரை ஆதினம் மடத்தின் மடாதிபதியாக 292வது ஆதீனமாக அருணகிரிநாதர் உயிரோடு இருந்த சமயத்தில், அவருக்கு அடுத்து நித்தியானந்தாவை இளைய மடாதிபதியாக (293வது மடாதிபதி) நியமித்திருந்தார். அதன் பிறகு ஏற்பட்ட குழப்பத்தில் நித்தியானந்தா மடாதிபதி பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து 293வது மடாதிபதியாகத் தேசிக பிரம்மாசாரியார் உள்ளார். இத்தகைய சூழலில் தான் நித்தியானந்தா, “நான் ஒரு பக்தனாக மதுரை ஆதின மடத்திற்குள் நுழைவதற்கு அனுமதிக்க வேண்டும்” எனச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதன்படி இந்த மனுவை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, “நித்தியானந்தா மதுரை ஆதின மடத்திற்குள் நுழைவதற்கு எந்த தடையும் இல்லை” என உத்தரவிட்டிருந்தனர். மேலும் இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் மரியம் கிளிட் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (19.06.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள், “இந்த மனு கடந்த 2018ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு. தற்பொழுது நித்தியானந்தா எங்கு உள்ளார்?. கைலாசா எங்கு உள்ளது?. அங்குச் செல்வதற்கு பாஸ்போர்ட் விசா ஏதும் உள்ளதா?.
மேலும் நீங்கள் அங்குச் சென்று வந்துள்ளீர்களா? என பல கேள்விகளை எழுப்பினார். அதற்கு நித்தியானந்தாவின் சார்பில் ஆஜரான அவரது சீடர் அர்ச்சனா என்பவர், “நான் சென்று வரவில்லை. ஆனால் ஆஸ்திரேலியாவின் அருகே உள்ள ஒரு தீவு சொந்தமான ஒரு நாடாக அந்த யுனைடெட் ஸ்டேட் ஆப் கைலாசா என்பது உள்ளது. ஐ.நா. சபை அதை அங்கீகரித்துள்ளது. அதற்கு பாஸ்போர்ட், விசா வழங்கப்பட்டு வருகிறது. எனது நண்பர்கள் சென்று வந்துள்ளார்கள்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதிகள், “நித்தியானந்தா சார்பில் புதிய வழக்கறிஞரை நியமிப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது” எனத் தெரிவித்து இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.