Skip to main content

அதிகாரிகளின் அஜாக்கிரதையால் அவதிக்குள்ளான மாற்றுத்திறனாளி பெண்...

Published on 06/04/2021 | Edited on 06/04/2021

 

wheel chairs not provided in panagudi poll booth

 

தமிழகத்தில் 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இந்த வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெற இருக்கிற நிலையில், 1.5 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 3,585 ஆண் வேட்பாளர்கள், 411 பெண் வேட்பாளர்கள், இரண்டு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

 

இதில், வாக்களிக்க வரும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகளுக்காகப் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, மாற்றுத் திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தோர் தங்களது வாக்குகளைச் செலுத்தும் இடத்திற்குச் செல்வதற்கு ஏதுவாக, வாக்குச்சாவடிகளில் சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சக்கர நாற்காலிகளை அந்தந்த மையத்திற்கு வரும் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்நிலையில், நெல்லையில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் சக்கர நாற்காலி இல்லாததால், மாற்றுத் திறனாளி பெண் சுமார் 200 மீட்டர் தூரம் வரை ஊர்ந்து சென்றே வாக்களித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 

 

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட பணகுடி பேரூராட்சியில் 50க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் திருஇருதய ஆரம்பப் பள்ளியில் 8 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் 234வது வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் வந்திருந்தார்.  

 

அவர், பள்ளியின் உயரமான வாயிலில் இருந்து சுமார் 150 மீட்டர் ஊர்ந்து முதலாவதாக வாக்குச்சாவடி 234க்கு வந்தார். அங்கு ஆண்கள் மட்டுமே வாக்களிக்க முடியும், பெண்களுக்கு தனியாக வாக்குச் சாவடி உள்ளது என அதிகாரிகள் கூறினர். இதனை அடுத்து அந்தப் பெண் மேலும் 100 மீட்டர்கள் படிகளையும் தாண்டி ஊர்ந்து சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.  

 

அந்தப் பெண் சுமார் 200 மீட்டர் கடுமையான வெயிலுக்கு நடுவில் எதனையும் பொருட்படுத்தாமல் தவழ்ந்து சென்றார். இவர் அப்படிச் சென்றது பார்ப்போரைக் கண்கலங்கச் செய்தது. இருப்பினும் இந்தப் பள்ளியில் முதியோர்களையும், மாற்றுத்திறனாளிகளையும் அழைத்துச் செல்வதற்குச் சக்கர நாற்காலி கொடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால், முதியோர்கள் பலரும் நடக்க முடியாமல் நடந்து சென்று தங்களது வாக்குகளைச் செலுத்தினர்.  

 

மேலும், பள்ளியின் நுழைவுவாயில் உயரமாக இருந்ததால், அதில் இறங்க முடியாமல் முதிர்ந்த பெண் ஒருவர் நீண்ட நேரம் கஷ்டப்பட்டார். இதனையடுத்து, அங்கு வந்த வாக்காளர்கள் இதுகுறித்து அதிகாரிகளிடமும் புகார் அளித்தனர். 

 

"ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சக்கர நாற்காலி முறையாக வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பணகுடி திருஇருதய ஆரம்பப் பள்ளியில் எந்தவிதச் சக்கர நாற்காலியும் வழங்கப்படவில்லை. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வாக்காளர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், சக்கர நாற்காலி இல்லாததால் மாற்றுத்திறனாளி பெண் ஊர்ந்து சென்று வாக்களித்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவிய சூழலில், இது நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவின் கவனத்திற்கும் சென்றுள்ளது. இதுகுறித்த தகவலறிந்த அவர், உடனே அந்த வாக்குச்சாவடிக்கான சக்கர நாற்காலிகளை ஏற்பாடு செய்துகொடுத்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிராக வழக்கு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Case against Nayinar Nagendran!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் பாஜக தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்தனின் உணவகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  இந்தச் சோதனையில் ரூ.1.10 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து, நெல்லையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் நெல்லை தொகுதிக்குத் தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை மறைத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதனால், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்க கோரிய தன் ஆட்சேபனை மீது முடிவெடுக்கும் வரை தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மனு தொடர்பான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நாளை (16-04-24)  விசாணைக்கு வருகிறது. 

Next Story

“தமிழ் கலாச்சாரம் மீது திமுக காங்கிரஸுக்கு வெறுப்பு உள்ளது” - பிரதமர் மோடி

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
PM Modi says DMK-Congress hates Tamil culture

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் பிரதமர் மோடி இன்று (15.04.2024) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “தமிழ் புத்தாண்டு தினத்தில் பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தமிழ் மொழியை பா.ஜ.க உலக அளவில் பிரபலப்படுத்தும். உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்களை அமைக்க பா.ஜ.க முடிவு செய்துள்ளது. தமிழ் கலாச்சாரம் மீது திமுக காங்கிரஸுக்கு வெறுப்பு உள்ளது. குடும்ப கட்சியான காங்கிரஸ், காமராஜரை அவமதித்தது. எம்.ஜி.ஆர் புகழை திமுக அவமதித்தது. ஜெயலலிதாவை சட்டசபையில் மோசமாக நடத்தியது.

பா.ஜ.க மற்றும் கூட்டணிக் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் செய்வதை திமுக அரசு தடுக்கிறது. திமுகவும், காங்கிரஸும் தமிழ்நாட்டு நலனுக்கு விரோதமாக கச்சத்தீவை வேறொரு நாட்டுக்கு கொடுத்துவிட்டனர். கச்சத்தீவை தாரைவார்த்தது மன்னிக்க முடியாத பாவம். குடும்ப அரசியலை ஆதரிக்கும் கட்சியின் ஊழல் ஆட்சியால் தமிழ்நாடு துன்பப்படுகிறது” எனப் பேசினார்.