ADVERTISEMENT

பகீர் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்; திருமணமாகாத விரக்தியில் இளைஞர் எடுத்த சோக முடிவு

08:25 PM Oct 25, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வஞ்சூர் கோபால் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவா - அமிர்தா தம்பதியினர். இவர்களின் இரண்டாவது மகன் சரத்குமார்(26) கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் 26 வயதான சரத்குமாருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டிப் பெற்றோரிடம் கூறி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் பின்னர் இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து சென்ற சரத்குமார் வீடு திரும்பாத நிலையில், தனது தங்கைக்கு ஃபோன் செய்து, தான் இறக்கப் போவதாகத் தெரிவித்ததோடு, அவருடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் ‘நான் இன்னும் ஒரு மணி நேரத்தில் இறக்கப் போவதாக’ ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.

இதனையடுத்து காட்பாடி அடுத்த ஜாப்ராபேட்டை பகுதியில் உள்ள விவசாய கிணற்றின் அருகே சரத்குமாரின் இருசக்கர வாகனமும் கிணற்றில் சரத்குமார் சடலமாகவும் கண்டெடுக்கப்பட்டுள்ளார். காட்பாடி தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் உடலை மீட்ட விருதம்பட்டு காவல்துறையினர், உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தனக்குத் திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT