What works are allowed from November 1? TN GOVT ANNOUNCEMENT

தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் கட்டுக்குள் இருக்கும் நிலையில், கூடுதல் தளர்வுகளை தமிழ்நாடு அரசு இன்று (14/10/2021) அறிவித்துள்ளது.

Advertisment

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "எதிர்வரும் பண்டிகை காலங்களில், கரோனா நோய்த்தொற்று பரவலைத் தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களின் நோய்த்தொற்று நிலையினைக் கருத்தில்கொண்டும், தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் 13/10/2021 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Advertisment

அதன் அடிப்படையில், பொதுமக்கள் அனைவரும் எதிர்வரும் பண்டிகைக் காலங்களில், கூட்டம் கூடுவதைத் தவிர்க்குமாறும், பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிவதோடு, தனிமனித இடைவெளியினைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறும், மாவட்ட நிர்வாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்குச் சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக கடைகளுக்குச் செல்வதைக் கருத்தில்கொண்டு, இன்றுமுதல் (14/10/2021) ஏற்கனவே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து வகைக்கடைகள், உணவகங்கள் மற்றும் அடுமனைகள் ஆகியவை இரவு 11.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

மேலும், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோன்று, அனைத்து தனிப்பயிற்சி நிலையங்கள் (Tuition Centres), அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் ஆகியவையும் இன்றுமுதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

மேலும், பின்வரும் செயல்பாடுகளுக்கு 01/11/2021 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி, மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் மாதாந்திர மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தலாம்.

தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகள் (Private Exhibitions) உரிய கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படலாம்.

மழலையர் விளையாட்டு பள்ளிகள் (Play Schools), நர்சரி பள்ளிகள் (LKG, UKG), அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்படலாம். காப்பாளர், சமையலர் உட்பட அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்கள் பங்கு பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்கள் கலந்துகொள்வதற்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

திருவிழாக்கள், அரசியல், சமுதாய மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு நடைமுறையிலுள்ள தடை தொடரும்.

பண்டிகை காலத்தில் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில மக்கள் கூடுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், சென்னை மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள், காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.