
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டு பேசினார். அதில் திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவது போல் ராஜ ராஜ சோழனுக்கு இந்து அடையாளம் கொடுக்கின்றனர் என விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து வெற்றிமாறனுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன் இதுகுறித்த கேள்விக்கு, ''ராஜராஜ சோழன் மன்னராக இருந்த காலத்திலேயே இங்கு இந்து மதம் என்ற ஒரு மதம் இருந்ததாக வரலாறு இல்லை. சைவ மதம், வைணவ மதம் தான் இருந்தது. இரண்டு மதங்கள் தான் இருந்தன. பெரும்பாலும் 'தென்னாடுடைய சிவனே' என்று சொல்வார்கள். அப்படி என்றால் தென்னாட்டு கடவுளாக சிவன் இருந்தார். விஷ்ணுவின் 10 அவதாரத்தில் இரணியனுக்கும் அவனது மகனுக்கும் ஏற்பட்ட சண்டையும் இருந்தது. நான் விஷ்ணுவின் பக்தன் நீ சிவனை வணங்குகிறாய் வணங்க கூடாது என்பதற்காக நடைபெற்ற சண்டை அது. அப்பா மகன்களுக்குள்ளேயே இந்த சண்டை இருந்தது. அந்த அளவிற்கு இரண்டு மதங்களும் முரண்பட்டு இருந்த காலம். ராவணன் மிகப்பெரிய சைவன். விஷ்ணு ராவணனை கொள்வதற்காக ஒரு அவதாரம் எடுத்து வருகிறார் என்கிறார்கள். எனவே சைவ வைணவ போராட்டம் என்பது காலங்காலமாக நடந்து வரும் போராட்டம். இதை பண்டிதர் நேரு அவர்களே சொல்லியிருக்கிறார். ஆகவே ராஜராஜன் காலத்திலே இரண்டு வேறுபட்ட மதங்களாக இருந்தன. அவை இரு வேறுபட்ட தத்துவத்தை சொன்ன மதங்களாக இருந்தன.ராஜராஜ சோழன் சைவ மன்னர் தான்'' என்றார்.