தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூர் கணபதி நகரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் மாநில துணைத்தலைவர்கள் டி. இரவீந்திரன், கே. முகமதுஅலி, பொருளாளர் கே.பி.பெருமாள், செயலாளர்கள் டெல்லி பாபு, சாமி.நடராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் கூறியதாவது, "சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டம் குறித்து ஏப்.8 ஆம் தேதி நல்லதொரு தீர்ப்பை வழங்கி உள்ளது. குறிப்பாக சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் இத்தகைய திட்டங்களுக்காக நிலத்தை கையகப்படுத்தியது தவறு என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இனி எந்த திட்டத்திற்கும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறாமல் தொடங்கக் கூடாது என வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதனை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது.
ஆனால் இதற்கு நேர் மாறாக ஏப்ரல் 15ஆம் தேதி சேலம் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நீதிமன்ற தீர்ப்பை உதாசீனப்படுத்தும் வகையில், 8 வழிச் சாலை திட்டத்தை திட்டமிட்டபடி அமைத்தே தீருவோம் என்று பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
நீதிமன்ற தீர்ப்பால் நிம்மதி பெருமூச்சு விட்ட விவசாயிகள் மத்தியில், மத்திய அமைச்சரின் பேச்சு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழக அரசாங்கம் உயர் நீதிமன்ற தீர்ப்பை மதித்து நடந்து கொள்ள வேண்டும். மேல்முறையீடு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.
விவசாயிகளின் விருப்பத்திற்கு எதிராக மத்திய மாநில அரசுகள் நடந்து கொண்டால் அதை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்துவோம். இது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக வருகிற 28-ஆம் தேதி திருவண்ணாமலையில் எட்டு வழிச்சாலையின் பாதிக்கப்பட்ட விவசாயிகள், இவ்வழக்கை நடத்திய வழக்கறிஞர்கள், நீதிபதி சிவசுப்ரமணியம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் சிறப்புக் கருத்தரங்கம் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு கூட்டியக்கத்தின் சார்பில் நடைபெற உள்ளது.
காவிரி டெல்டா விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி, ரசாயன மண்டலமாக அறிவித்து தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நேரத்தில் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் கொண்டுவர மாட்டோம். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்போம் என அறிவித்தனர். ஆனால் அதற்கு மாறாக சுற்றுச்சூழல் அறிக்கையை ஓஎன்ஜிசி நிறுவனம் தாக்கல் செய்யலாம் என இரண்டு நாட்களுக்கு முன்னர் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை மீறும் செயலாகும். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த திட்டங்களையும் அறிவிக்கக் கூடாது. மீறினால் அதனை எதிர்த்து ஒத்த கருத்துடைய அமைப்புகளை ஒருங்கிணைத்து கூட்டு போராட்டம் நடத்தப்படும்.
எண்ணெய் கிணறுகள் தோண்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நேரடியாக களத்தில் இறங்கி தடுப்போம். இதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தமிழக அரசு விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
பெட்ரோலிய ரசாயன மண்டலம் கரூர்- கோவை 6 வழிச்சாலை, எண்ணெய் குழாய் பதிப்பு, உயர் அழுத்த மின்கோபுரம் என வளர்ச்சி திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்தைக் கேட்க வேண்டியதில்லை என அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். வேதாந்தா நிறுவனமும் இதையே வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு பலத்த அடி கொடுக்கும் வகையில்தான் உயர் நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கியுள்ளது.
விவசாயிகளை பாதிக்கக்கூடிய, விவசாயிகளின் நிலத்தின் மீதான உரிமையை பாதிக்கக் கூடிய அனைத்து திட்டங்களையும் தமிழக அரசு கைவிட வேண்டும். விவசாயிகளின் நில உரிமையை பாதிக்கப்படக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடுமையாக எதிர்க்கும்" என்றார்.
சேலம் டூ சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை என்றைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்தாரோ, அப்போது முதலே அவருக்கு ஏழரை ஆரம்பித்து விட்டது என்கிறார்கள், இத்திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள். நாடாளுமன்றத் தேர்தலைப் போல, சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுகவுக்கு மரண அடி கொடுப்போம் என சூளுரைத்திருக்கிறார்கள் சேலம் விவசாயிகள்.
சேலம் - சென்னை 8 வழிச்சாலைத் திட்டத்தை 10 ஆயிரம் கோடி ரூபாயில் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் வரை 277.3 கி.மீ. தூரத்துக்கு பசுமைவழி விரைவுச்சாலை அமைக்க, 2343 ஹெக்டேர் நிலத்தை சிறு, குறு விவசாயிகளிடம் இருந்து தடாலடியாகப் பறித்துக் கொண்டது எடப்பாடி பழனிசாமியின் அரசு.
நிலம் கொடுக்க மறுத்த விவசாயிகள், கோரிக்கை மனு அளித்தவர்கள், திட்டத்துக்கு எதிராகப் பேசியவர்கள் என அனைவர் மீதும் கன்னாபின்னாவென்று வழக்குப் போட்டு அச்சுறுத்தினர். இந்த திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ''விவசாயிகளிடம் இருந்து நிலத்தைக் கையகப்படுத்திய முறை தவறு. நிலத்தை உடனடியாக உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்காக போடப்பட்ட அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும்,'' என்று 2019 ஏப்ரல் 8ம் தேதி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இதை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. உச்சநீதிமன்றமோ, ''8 வழிச்சாலைத் திட்டத்திற்குத் தடை இல்லை. அதேநேரம், புதிய அரசாணை வெளியிட வேண்டும். மேலும், சுற்றுச்சூழல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும்'' என்று தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு, விவசாயிகள் தலையில் பேரிடியாக இறங்கியது. இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கலின்போது, விரைவில் சேலம் டூ சென்னை 8 வழிச்சாலைத் திட்டத்துக்கான அரசாணை வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
இத்திட்டம் அமைய உள்ள சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில், பத்தாயிரம் விவசாயிகள், தேர்தல் நேரத்தில் இத்திட்டத்தை நிறுத்தி வைப்பது தொடர்பாக ஏதேனும் அறிவிப்பு வருமா என எதிர்பார்த்து இருந்தனர். அதிமுக, திமுக தேர்தல் அறிக்கைகளில் இது பற்றி எதுவும் குறிப்பிடாதது விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் சில திருத்தங்களைச் செய்து, மார்ச் 14ம் தேதி வெளியிட்டது. அதில், 'திமுக ஆட்சி அமைந்தால், 8 வழிச்சாலைத் திட்டம் ரத்து செய்யப்படும்' என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதைக்கேட்டு, இத்திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் உற்சாகம் அடைந்தனர். சேலம் மாவட்டத்தில் உத்தமசோழபுரம், பாரப்பட்டி, வீரபாண்டி, பூலாவரி, நிலவாரப்பட்டி, கூமாங்காடு உள்ளிட்ட பத்து பஞ்சாயத்துகளைச் சேர்ந்த விவசாயிகள் திரண்டு வந்து, ஒருவருக்கொருவர் இனிப்புகளை ஊட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
இது தொடர்பாக 8 வழிச்சாலைத் திட்ட எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் மோகனசுந்தரம், சிவகாமி ஆகியோர் நம்மிடம் பேசினர்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, எட்டுவழிச்சாலை திட்டம் ரத்து செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்துள்ளார். இந்த அழிவுத்திட்டம் வேண்டாம் என்று கடந்த 3 வருஷமாகக் கதறி, அழுது புரண்டு கோரிக்கை வைத்தோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி எங்களை ஒருமுறை கூட நேரில் சந்தித்துப் பேசவில்லை.
அவரை சந்திக்கப்போன எங்களை மறித்து காவல்துறையினர் வழக்கு போட்டனர். சர்வாதிகார ஆட்சியில்தான் இப்படி எல்லாம் நடக்கும். இதுவரை கடும் மன உளைச்சலில் இருந்தோம். திமுக அளித்த வாக்குறுதிக்குப் பிறகுதான், நிம்மதியாக இரவு தூங்கச் போகிறோம். விவசாயிகளின் நெஞ்சில் பால் வார்த்து விட்டார் ஸ்டாலின். இத்திட்டத்தை ரத்து செய்வதன் மூலம் விவசாயிகளை மட்டுமின்றி உணவு உற்பத்தி, கனிம வளம் கொள்ளை, சுற்றுச்சூழல் ஆகியவற்றையும் ஸ்டாலின் காப்பாற்றி விடுவார்.
'விவசாயி மகன்' என்று மூச்சுக்கு முந்நூறு முறை சொன்னாலும், விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படும் எடப்பாடி பழனிசாமி விவசாயியாக முடியாது. விவசாயிகளின் துயரங்களை உணர்ந்த ஸ்டாலின்தான் உண்மையான விவசாயி. கடந்த பாராளுமன்றத் தேர்தலை போல, வரும் சட்டமன்றத் தேர்தலிலும் விவசாயிகள் திமுக கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வோம். அதிமுகவை தோற்கடிப்போம், என்றனர்.
இது ஒருபுறம் இருக்க, மார்ச் 13ம் தேதி வெளியிட்ட திமுக தேர்தல் அறிக்கையிலேயே 8 வழிச்சாலை பற்றி குறிப்பிடாததும் ஒரு தரப்பு விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க மற்றொரு ஒருங்கிணைப்பாளரான குள்ளம்பட்டி பன்னீர்செல்வம் கூறுகையில், ''திமுக தேர்தல் அறிக்கையை 7 பேர் கொண்ட குழு, கடந்த சில மாதங்களாக ஆலோசித்து எழுதி இருக்கிறது. அப்படி இருந்தும், 8 வழிச்சாலைத் திட்டத்தை முதல்முறை வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலேயே சொல்லாதது எங்களில் பலருக்கு கடும் ஏமாற்றம் அளித்தது.
இங்குள்ள திமுக பிரமுகர்களிடம் விவசாயிகள் அழுத்தம் கொடுத்த பிறகுதான், மார்ச் 14ம் தேதி சில திருத்தங்களை செய்து, 8 வழிச்சாலை திட்டம் ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டத்தை திமுக முழு மனதோடு எதிர்க்கிறதா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது'' என்றார். உலகுக்கே படியளக்கும் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் எந்த ஓர் அரசும் நீடித்ததாக வரலாறு இல்லை. எடப்பாடி பழனிசாமியும் இதை உணராதவர் அல்லர்.
சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைத் திட்ட வழக்கில், ''ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும்; பூசாத மாதிரியும் இருக்கணும்'' என்ற கணக்காக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால், டெல்லியைத் தொடர்ந்து தமிழக்திலும் விவசாயிகள் போராட்டம் வெடிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
மத்திய பாஜக அரசின் பாரத்மாலா திட்டத்தின் கீழ், சேலம் - சென்னை இடையே எட்டு வழிச்சாலைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் பட்ஜெட், 10 ஆயிரம் கோடி ரூபாய். இத்திட்டம், சேலத்தில் தொடங்கி தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் வழியாகச் சென்னையில் முடிகிறது. இந்த சாலையின் மொத்த நீளம் 277.3 கி.மீ. எடப்பாடி பழனிசாமி அரசு, இத்திட்டத்துக்காக 2,343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தும் பணிகளில் தீவிரம் காட்டியது.
இந்த சாலைக்காகக் கையகப்படுத்தப்படும் நிலங்களில் 80 சதவீதம் சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான விளைநிலங்கள். எட்டுவழிச்சாலை வந்தால், சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 3 லட்சம் மரங்கள் அழிக்கப்படும். 10 ஆயிரம் குடும்பங்கள் வீடுகளை இழக்க நேரிடும். சேலம் கஞ்சமலை, திருவண்ணாமலையில் உள்ள கவுந்தி மலை, வேடியப்பன் மலைகளில் உள்ள கனிம வளங்கள் சுரண்டப்படும் அபாயம் உள்ளது. இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் தொடக்கத்தில் இருந்தே இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
வெட்டப்படும் தென்னை மரத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என ஆசை வலை விரித்தும் விவசாயிகள் கொஞ்சமும் இறங்கி வரவில்லை. ஏற்கனவே, அதிமுக அரசு, சேலம் - உளுந்தூர்பேட்டை சாலைக்காக நிலம் வழங்கிய மக்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு மேலாகியும் முழுமையான இழப்பீடு தராமல் வஞ்சித்து இருந்தது. இதையெல்லாம் யோசித்த விவசாயிகள், கடந்த 2018ம் ஆண்டு முதல் இத்திட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த எதிர்ப்புகளுக்கு இடையே, விளைநிலங்களுக்குள் பூட்ஸ் கால்களுடன் போலீசாரை இறக்கி, நிலத்தை அளந்து, முட்டுக்கல் நட்டனர் வருவாய்த்துறையினர். திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் விவசாயிகள். கடந்த 2019 ஏப்ரல் 8ம் தேதி, ''8 வழிச்சாலைக்காக நிலத்தைக் கையகப்படுத்திய நடைமுறை தவறு என்றும், கையகப்படுத்திய நிலத்தை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தது. மேலும், இதற்கான அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தது.
இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை, உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இருதரப்பு விசாரணைகளும் முடிந்த நிலையில், 2020 டிச. 8ம் தேதி இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
''எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்குத் தடை இல்லை. ஆனால், முந்தைய அறிவிக்கை அடிப்படையில் நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை செல்லும். மீண்டும் புதிய அறிவிக்கையை வெளியிட்டு இத்திட்டத்தைத் தொடரலாம். ஏற்கனவே கையகப்படுத்திய நிலங்களை உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். சுற்றுச்சூழல் துறையிடம் முன்னனுமதி பெறாமல் நிலத்தைக் கையகப்படுத்தியது தவறு.
இத்திட்டத்தைச் செயல்படுத்த உரிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்கிறோம். அதேநேரம், மத்திய அரசுக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கும் எட்டுவழிச்சாலை போடும் அதிகாரம் இருக்கிறது,'' என்று தீர்ப்புரையில் கூறியிருந்தது.
தீர்ப்பின் முழு விவரம் வருவதற்கு முன்பே, எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்குத் தடை என்று டிவி சேனல்களில் செய்திகள் வெளியானதால், சேலத்தில் விவசாயிகள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நேரம் போகப்போகத் திட்டத்தை, புதிய வழிகாட்டுதல் படி செயல்படுத்தலாம் என்ற தகவல் பரவியதால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
சேலம் ராமலிங்கபுரத்தில் ஒன்றுகூடிய 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிருப்தி அளிக்கிறது என்றும், எட்டுவழிச்சாலைத் திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். இதற்கிடையே, கியூ பிரிவு, காவல்துறை தனிப்பிரிவு, எஸ்பிசிஐடி உள்ளிட்ட அனைத்து உளவுப்பிரிவு காவல்துறையினரும் வாகனங்களுடன் வந்திறங்கவும், அங்கு மேலும் டென்ஷன் எகிறியது.
எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் குப்பனூர் நாராயணன், சிவகாமி, கவிதா, மோகனசுந்தரம், குப்புசாமி ஆகியோர் பேசினர்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, மக்கள் நலன் சார்ந்ததாக இல்லை. மத்திய, மாநில அரசுகளுக்குச் சாதகமாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. சூழலியல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை - 2020 (இஐஏ - 2020), ஒரு திட்டம் தொடங்குவதற்கு முன்பாக சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெறத்தேவை இல்லை என்று கூறுகிறது. இந்த அறிவிக்கை, இன்னும் சட்டமாகவில்லை. இப்போது வந்துள்ள தீர்ப்பானது, மத்திய அரசுக்கு இஐஏ - 2020 அறிவிக்கையைச் சட்டமாக்கிவிட்டு, அதன்பிறகு புதிய அறிவிக்கை வெளியிட்டு எட்டுவழிச்சாலை போடுங்கள் என மறைமுகமாகச் சொல்வது போல் இருக்கிறது.
உண்மையிலேயே மக்கள் நலன் சார்ந்துதான் சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை அமைகிறது எனில் நாங்களே முன்வந்து எங்கள் நிலத்தைத் தர தயாராக இருக்கிறோம். ஆனால், ஆட்சியாளர்கள் கொள்ளை அடிக்கவும், கஞ்சமலையில் இருக்கும் இரும்பு உள்ளிட்ட கனிம வளங்களைத் தனியார் கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்க்கவும்தான் இந்த திட்டத்தைக் கொண்டு வர துடிக்கிறார்கள. இந்த திட்டத்துக்காக எங்கள் நிலத்தை ஒரு அடிகூட விட்டுத்தர மாட்டோம்.
கடந்த இரண்டு ஆண்டு காலமாக எங்கள் மீது எடப்பாடி பழனிசாமியின் போலீசார் எத்தனையோ பொய் வழக்குகளைப் போட்டு, கைது செய்துள்ளனர். போலீசார், வருவாய்த்துறையினர் டார்ச்சரால் மன உளைச்சல் ஏற்பட்டு பல விவசாயிகள் மாரடைப்பில் உயிரிழந்துள்ளனர். இறந்து போன விவசாயிகளின் குடும்பத்தினருக்கு என்ன இழப்பீடு கொடுத்தாலும் ஈடுகட்ட முடியுமா?
சேலத்திலிருந்து சென்னை செல்ல ஏற்கனவே மூன்று வழித்தடங்கள் இருக்கின்றன. அந்த வழியாக எட்டுவழிச்சாலை போடலாமே? மலையைக் குடைந்து, இயற்கையை அழித்து எட்டுவழி என்ற பெயரில் பசுமைவழி விரைவுச்சாலை தேவை இல்லை. இத்திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் விரைவில் டெல்லியில் விவசாயிகள் நடத்துவதைப் போல சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களிலும் தொடர் போராட்டத்தைத் தொடங்க இருக்கிறோம். எங்கள் மண்ணுக்காக நாங்கள் தற்கொலை போராட்டத்தில் இறங்கவும் தயாராக இருக்கிறோம்,'' என்றனர்.
தீர்ப்பின் உள்ளடக்கம் குறித்து பாமகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலுவிடம் கேட்டோம்.
''அறிவிக்கப்பட்ட ஒரு திட்டத்தைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது தவறு என்கிறது உச்சநீதிமன்றம். நெடுஞ்சாலைத்துறைக்குச் சாலைகள் அமைக்க அதிகாரம் இருக்கிறது. அதேவேளையில், விவசாயிகள் பெயரில் இருக்கும் நிலத்தை அரசுக்கு வகை மாற்றம் செய்ததையும், அதில் விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இப்போது உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது.
சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெற்ற பிறகுதான் ஒரு திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் சொல்லி இருக்கிறது. அதை அடிப்படையாகக் கொண்டுதான் சென்னை உயர்நீதிமன்றம் அப்போது எட்டுவழிச்சாலை வழக்கில் தீர்ப்பு அளித்தது. ஆனால் இன்றைக்கு உச்சநீதிமன்றம், திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகும், இடைப்பட்ட காலத்தில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை மத்திய அரசு பெற வேண்டும். அந்த அனுமதி சரியாக வழங்கப்பட்டு உள்ளதா என்பதை இப்போது நாங்கள் ஆய்வு செய்யவில்லை என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
ஒருவேளை, எதிர்காலத்தில் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி கொடுத்தாலும், நிலத்தை வகை மாற்றம் செய்ய உரிய விதிகள் பின்பற்றப்படாமல் போனாலும் கூட அதை எதிர்த்து நாம் வழக்கு தொடரலாம். உயர்நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக ஏற்றுக் கொள்ளாதது விவசாயிகளுக்குப் பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது. இந்த திட்டமே தேவை இல்லை என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு.
சேலத்திலிருந்து சென்னை செல்ல ஏற்கனவே மூன்று வழித்தடங்கள் இருக்கும்போது புதிய வழித்தடத்தில் எட்டுவழிச்சாலைத் திட்டம் தேவையில்லை. இதற்கான திட்ட அறிக்கை முறையாகத் தயாரிக்கப்படவில்லை. விளை நிலங்களைக் கையகப்படுத்தும் இப்படியொரு திட்டம் தேவையில்லாதது. மதுரை - சென்னை இடையே எட்டு வழிச்சாலை அமைக்கும் திட்டம்தான் ஆரம்பத்திலிருந்தது. அதை மாற்றித்தான் சேலம் - சென்னை எட்டுவழிச்சாலையாக மாற்றி இருக்கிறார்கள். தொடர்ந்து போராடுவோம்.
உயர்நீதிமன்ற தீர்ப்பைப் பகுதியாக நீக்கம் செய்து, ஒரு பகுதியை உறுதி செய்திருக்கிறது, உச்சநீதிமன்றம். இந்தியா முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் சூழலில், இப்படியொரு தீர்ப்பை அறிவித்து இருப்பது வினோதமாக இருக்கிறது. இப்போது ஒரு திட்டம் நிறைவேறுவதற்கு எத்தகைய சமரசங்களையும் செய்து கொள்ளலாம் என்ற அளவிற்குச் சட்டங்களின் அழுத்தம் நீர்த்துப் போய்க்கொண்டு இருப்பது கவலை அளிக்கிறது,'' என்கிறார் வழக்கறிஞர் பாலு.
விவசாயிகளை மீண்டும் போராட்டக்களத்திற்கு அழைத்திருக்கிறது உச்சநீதிமன்ற தீர்ப்பு.