பொருளாதார வீழ்ச்சி இல்லை என்கிறார் மோடி. பொருளாதார வீழ்ச்சி என்கிறார்கள் வல்லுநர்கள் யார்கூறுவதை நம்புவது பாஜகவை கிண்டலடிக்கும் மணிசங்கர் அய்யர்.

Advertisment

manishankar iyer

"பாஜக அரசின் பணமதிப்பிழப்பும், ஜி.எஸ்.டி வரி போன்றவைகளால் தான் பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது," என்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர்.

ஒரு சில நாட்களுக்கு முன்பு விக்ரவாண்டியில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குறித்து பேசியது பல்வேறு அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் மயிலாடுதுறை டி,எஸ்,பி வெள்ளதுறையிடம் மனு கொடுத்தனர்.

Advertisment

அங்கிருந்து வெளியில் வந்த அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்," விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை பற்றி அவதூறாக பேசிய சீமானை உடனே கைது செய்ய வேண்டும் என்று மனு கொடுத்திருக்கிறோம். மோடி பிரதமரான பின்புதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையையும் மேற்கொண்டார். அதன் தாக்கம் தற்போது தெரிய வந்துள்ளது. ஜிஎஸ்டி வரியை அமல்படுத்துவதற்கு முன்பு அதை முறைப்படுத்தியிருக்க வேண்டும். அதை பாஜக அரசு செய்யத் தவறியதால் வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவுக்கு வருவது தடைபட்டு போனது. மோடியின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டின் வருமானம் குறைந்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கிய பொருளாதார கொள்கைகளை வீனடித்தவர்கள் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டதும் காங்கிரஸ் உருவாக்கிய பொருளாதார கொள்கை பற்றிய விவரங்களை கேட்கின்றனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் இந்தியாவின் மீது இருந்த நம்பிக்கை இப்போது இல்லை. பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதாக வல்லுநர்களே தெரிவிக்கின்றனர். ஆனால் பிரதமர் மோடியோ பொருளாதார வீழ்ச்சி இல்லை என்கிறார், பொருளாதார வல்லுநர்கள் கூறுவதை நம்புவதா அல்லது மோடி சொல்வதை நம்புவதா ஒன்னும் புரியாமல் மக்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்," என்றார்.